மவுண்ட் மன்கன்யில்: இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் நேப்பியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி பேட்டிங்கில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, கேப்டன் கோலி, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் உள்ளனர்.
பந்து வீச்சில் முகமது சமி, சாகல், குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் புவனேஸ்வர் குமார், ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோரும் உள்ளனர். பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறி இடைநீக்கம் செய்யப்பட்ட ஹர்த்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் மீதான நடவடிக்கையை கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது.
இதையடுத்து ஹர்த்திக் பாண்ட்யா நியூசிலாந்துக்கு புறப்பட்டு இந்திய அணியுடன் இணைகிறார். ஆனால் நாளைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான் என்று தெரிகிறது.
முதல் போட்டியில் வெற்றி பெற்றால்தால் இந்தியா நம்பிக்கையுடன் களம் இறங்கும். ஆனால் நியூசிலாந்து திடீரென எழுச்சி பெற கூடிய அணி என்பதால், இந்தியா கவனமுடன் விளையாடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் ஆரூடம் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை வீழ்த்தினால் நிச்சயம் 2வது ஒருநாள் போட்டியை நியூசிலாந்து தனது வசமாக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து முதல் ஆட்டத்தில் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் வில்லியம்சஸ் தவிர மற்ற வீரர்கள் முதல் ஆட்டத்தில் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
நாளைய ஆட்டத்தில் தோற்றால் நியூசிலாந்து கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும். இதனால் வெற்றி பெற கடினமாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நாளைய போட்டியிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.