மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணியை பாகிஸ்தான் ஜாம்பவான் மிஸ்பா உல் ஹக் கணித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன. இந்த அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணியும் விளையாடவுள்ளது.

இதனால் ரசிகர்களிடையே தீவிர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் இதே 4 அணிகள் தான் உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இதனால் மீண்டும் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்லுமா அல்லது சொந்த மண்ணில் விளையாடும் இந்திய அணி வெல்லுமா என்ற விவாதம் அதிகரித்துள்ளது.
ஏனென்றால் கொல்கத்தா மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணியை காட்டிலும் ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என்ற விவாதத்தின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான்களான மிஸ்பா உல் ஹக் மற்றும் மாலிக் இருவரும் கணித்துள்ளனர்.
அப்போது மிஸ்பா உல் ஹக் பேசுகையில், என்னை பொறுத்தவரை புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் தான் இறுதிப்போட்டியில் ஆடுவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள 4 அணிகளும் மிகவும் பலம் வாய்ந்த அணிகள் தான். அந்தந்த நாளில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் மற்ற 3 அணிகளை ஒப்பிடும் போது, இந்திய அணி கொஞ்சம் கூடுதல் பலம் வாய்ந்த அணியாக பார்க்கிறேன். ஏனென்றால் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இந்திய அணியில் சரிக்கு சமமாக வீரர்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் மாலிக் பேசுகையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுவார்கள் என்று கணித்துள்ளார்.