டர்பன் 20-20 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா தகுதி பெற்றது. தனது கடைசி சூப்பர் 8 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை அபாரமாக வீழ்த்தியதன் மூலம் அரை இறுதிக்குள் இந்தியா நுழைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் எட்டுச் சுற்று ஆட்டங்கள் நடந்து வந்தன. இதில், இந்தியா தான் சந்தித்த முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது. இதனால், அடுத்த இரு ஆட்டங்களிலும் வென்றால்தான் அரை இறுதிக்குப் போக முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை அதிரடியாக தோற்கடித்தது இந்தியா. இந்திய வீரர் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்தும், 12 பந்துகளில் அரை சதத்தை எடுத்தும் சாதனை படைத்தார். நேற்று 2வது போட்டியை சந்தித்தது இந்தியா. இதில், தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் அரை இறுதி என்பதால் இந்திய வீரர்கள் பெரும் உற்சாகத்துடனும், திட்டத்தோடும் களம் இறங்கினர். முதலில் இந்தியா பேட் செய்தது. தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சு சற்று சிறப்பாக இருந்ததால் இந்தியா நிதானமாக ரன் குவித்தது. இந்தியத் தரப்பில் ரோஹித் சர்மா சிறப்பாக ஆடினார். அவர் 40 பந்துகளைச் சந்தித்து 50 ரன்களைக் குவித்தார். கேப்டன் டோணி 45 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 153 ரன்களை எடுத்தது. பின்னர் தென் ஆப்பிரிக்கா பேட் செய்தது. இந்திய பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்காவால் ரன் குவிக்க முடியவில்லை. பெளச்சர் (36), மார்க்கல் (36) ஆகியோர் மட்டுமே ஓரளவு சிறப்பாக ஆடினர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 37 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தியத் தரப்பில் ஆர்.பி.சிங் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக ரோஹித் தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டியின் துவக்கத்தில் இருந்த தொடர் வெற்றிகளை பெற்று வந்த தென் ஆப்பிரிக்கா சூப்பர்-8 சுற்றில் 2 போட்டிகளில் வென்றும் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போய்விட்டது. நாளை அரை இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் டர்பன் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவையும், கேப்டவுன் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்தையும் சந்திக்கின்றன.