மிர்பூர்: மிர்பூர் 2வது டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை நழுவ விட்டு, 2வது இன்னிங்ஸை ஆட களம் புகுந்து, எக்ஸ்ட்ரா ரன்கள் மூலம் வெற்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் இரு டெஸ்ட் போட்டிகளையும் வென்று, டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா, வங்கதேசம் இடையிலான சிட்டகாங் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இதையடுத்து மிர்பூரில் 2வது டெஸ்ட் போட்டி நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 233 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 544 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து வங்கதேசம் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஈசியாக சுருட்டி விடலாம் என்று நினைத்த இந்திய பந்து வீச்சாளர்களுக்கு தமீம் இக்பால் ரூபத்தில் பெரும் சோதனை வந்தது.
படு வேகமாக ஆடிய இக்பால், சிறப்பான சதத்தைப் போட்டார். 151 ரன்களைக் குவித்து விட்டு ஓய்ந்தார் இக்பால்.
பின்னர் வந்தவர்களில் ஜூனைத் சித்திக் 55 ரன்களும், ஷஹாதத் ஹூசேன் 40 ரன்களும் சேர்த்தனர்.
முகம்மது அஷ்ரபுல் 25 ரன்களும், முஷ்பிகர் ரஹீம் 10 ரன்களும் சேர்த்தனர். ரஹீம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 312 ரன்களில் சுருண்டது வங்கதேசம்.
புயலாக மாறிய ஜாகிர்கான்...
இந்திய அணியின் ஜாகிர்கான் இன்று புயலாக மாறி வங்கதேச வீரர்களை வாரிச் சுருட்டி விட்டார். அபாரமாக பந்து வீசிய ஜாகிர்கான் 7 விக்கெட்களை அள்ளினார். ஓஜாவுக்கு 2 விக்கெட்களும், ஹர்பஜன் சிங்குக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மகா எளிதான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஆனால் இந்த இரண்டு ரன்களையும் இந்திய வீரர்கள் ஓடி எடுக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விட்டது.
உபரி ரன்களாகவே இந்த இரண்டு ரன்களும் வந்து விட்டதால், இந்தியா விக்கெட் இழப்பின்றி, 10 விக்கெட் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியை வென்றது.
இரு டெஸ்ட் போட்டிகளையும் வென்று டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.