இந்திய கிரிக்கெட் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தினம் இன்று!
டெல்லி: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தினம் இன்று. இதே நாளில்தான் 1983ம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலில் உலக கோப்பையை கைப்பற்றியது.
இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இந்த அளவுக்கு ஐசிசியில் ஆதிக்கம் செலுத்தவும், வணிகமயத்தால் கிரிக்கெட் வீரர்கள் வருமானத்தில் குளிப்பதற்கும் பிள்ளையார் சுழி போடப்பட்ட நாள் இதுதான்.
அடுத்தடுத்து 2 உலக கோப்பைகளை வென்றுவிட்டு, என்னை வீழ்த்த யாராவது உண்டா? என கொக்கரித்த மேற்கிந்திய தீவுகள் கோலியாத்தை, அப்போதுதான் கிரிக்கெட் கற்றுவந்த குட்டி இந்திய அணியான, தாவீத் வீழ்த்திய நாளும் இதுதான்.

சாம்பியன் கபில்தேவ்
ஜிம்பாப்வேயிடமே 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி, கபில்தேவின் அசத்தல் 175 ரன்கள் உதவியோடு வெற்றி பெற்ற இந்திய அணி, பைனலுக்கு வந்ததே பெரிய அதிசயம்தான். அதிலும் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது அன்றைய காலகட்டத்தில் பெரிய உலக பேரதிசயம்.

கதம், கதம்
டாசில் தோற்றதால் முதலில் பேட் செய்யபிடித்து தள்ளப்பட்ட இந்திய அணி, 54.4 (அப்போது மொத்தம் 60 ஓவர்கள்) ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்து 183 ரன்களுக்கே ஆல்-அவுட் ஆனபோது, அவ்வளவுதான் இந்திய அணியின் கதி என்றுதான் கிரிக்கெட் விற்பன்னர்கள் முதல் கம்மர்கட்டு விற்பவர் வரை கருதியிருந்தனர்.

கவிழ்த்த இந்தியா
இதன்பிறகு நடந்தவைதான் வரலாறு. முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை உலகுக்கு உணர்த்தியது கபில்தேவ் டீம். விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற அதிரடி மன்னர்களை கொண்ட மே.இ.தீவுகளை வெறும் 140 ரன்களில் சுருட்டி வெற்றியை பறித்தனர், கத்துக்குட்டி பவுலர்கள் என அதுவரை கேலிக்கு உள்ளாகியிருந்த இந்திய பவுலர்கள்.

வாட் ஏ கேட்ச்
இந்த போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ்சை வீழ்த்தியது பெரும் திருப்புமுனை. அடுத்தடுத்து 3 பவுண்டரிகள் அடித்து இந்திய அணி வயிற்றில் புளியை கரைத்த ரிச்சர்ட்ஸ் 4வதாகவும் பவுண்டரி அடிக்க முயல பேட்டின் ஓரம் பட்டு பந்து மேல் எழுந்தது. சுமார் 20 யார்ட் தூரம் ஓடி அதை கேட்சாக மாற்றி கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கிய கேட்சுகளில் ஒன்றாக அதை பதிய செய்தார் கபில்தேவ்.

சுதந்திர தினம்
அமர்நாத் பந்தில், மே.இ.தீவுகளின் கடைசி விக்கெட் மைக்கேல் ஹோல்டிங் எல்.பி.டபிள்யூ ஆகவும், இந்திய வீரர்கள் ஸ்டம்பை பிடுங்கியபடி வெற்றி கொண்டாட்டம் நடத்தும் காட்சிகளை மட்டும்தான் இப்போதுள்ள தலைமுறை வீடியோக்களில் பார்த்து ரசிக்க முடிகிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் அது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை கொடுத்தது. அப்போதைய இளம் தலைமுறையினருக்கு, அது இன்னொரு சுதந்திர அறிவிப்பு போன்ற உணர்வை கொடுத்தது.


Click it and Unblock the Notifications