பெங்களூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி 189 ரன்களில் ஆல்அவுட்டானது.
ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையே புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில், காயமடைந்த முரளி விஜய்கு பதில், அபினவ் முகுந்த், ஜெயந்த் யாதவுக்கு பதில் கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்தியா, தேனீர் இடைவேளை நேரத்தை தாண்டும்வரை தாக்குப்பிடித்து 189 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக உள்ளூர் வீரரான கே.எல்.ராகுல் 90 ரன்கள் விளாசினார். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான பெங்களூரில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆப்-ஸ்பின்னர் நேதன் லையோன், 50 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஓ'கீபே மற்றும் ஸ்டார்க் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த ஆஸி. ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 23 ரன்களுடனும், மேட் ரென்ஷா 15 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.