மெல்போர்ன்: புதிய சாதனையுடன் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியுள்ளது இந்தியா. இதுவரை உலகக் கோப்பையில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்த தென் ஆப்பிரிக்காவை இன்று அடித்து உதைத்து தூக்கிப் போட்டு விட்டனர் இந்தியர்கள். 130 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை இந்தியா இன்று பெற்றது.
பேட்டிங்கைப் போலவே பந்து வீச்சிலும்ஸ பீல்டிங்கிலும் பிரமிக்க வைத்து விட்டனர் இந்திய வீரர்கள். அடுத்தடுத்து முக்கிய விக்கெட்களை தேவையான இடைவெளியில் இந்தியா வீழ்த்தியதால் தென் ஆப்பிரிக்க வீரர்களால் நிமிரவே முடியவில்லை.

தொடக்க ஆட்டக்காரர் குவின்டன் டி காக் வீழ்ந்த நிலையில் இந்தியாவின் பந்து வீச்சை சமாளித்து ஆடி வந்த அம்லா, 28 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் மோஹித் சர்மா வீசிய பந்தை தூக்கி அடித்து ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இது முக்கியத் திருப்பமாக அமைந்தது.
அடுத்து கேப்டன் ஏப் டிவில்லியர்ஸும், டுபிளஸ்ஸிஸ்ஸும் இணைந்து ரன் குவிக்க ஆரம்பித்தனர். இந்த ஜோடியை அருமையான ரன் அவுட் மூலம் கேப்டன் டோணியும், மோஹித் சர்மாவும் பிரித்தனர்.

ஏப் டிவில்லியர்ஸ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டுபிளஸ்ஸிஸ்ஸை ஷிகர் தவான் கேட்ச் செய்து அனுப்பி வைத்தார். டுபிளஸ்ஸிஸ் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடி வீரர் ஜேபி டுமினியும் ஆட்டமிழந்தார். ஒரு என் எடுத்திருந்த ஸ்டெயினும் போய் விட்டார். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வந்த தென் ஆப்பிரிக்கா 40.2 ஓவர்களில் ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. 177 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.
முக்கியமான அதிரடி வீரர்களான டிவில்லியர்ஸ், டுபிளஸ்ஸிஸ், மில்லர், அம்லா, டுமினி ஆகியோரை இந்திய பவுலர்கள் சரியான சமயத்தில் வீழ்த்தியதே இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.

ஷிகர் தவானின் அபார சதம், விராத் கோஹ்லி, அஜிங்கியா ரஹானேவின் சிறப்பான ஆட்டம், கேப்டன் டோணியின் கடைசி நேர அதிரடி காரணமாக இந்தியா, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்களைக் குவித்தது.
தென் ஆப்பிரி்க்காவின் பந்து வீச்சை மிக சாதுரியமாக இன்று சந்தித்தது இந்தியா. ஆரம்பத்தில் அமைதியாக ஆடிய இந்தியா பின்னர் அதிரடிக்கு மாறியது. குறிப்பாக ஷிகர் தவான் தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சை பிரித்து மேய்ந்து விட்டார். ஸ்டெயின், பிலான்டர், மார்னி மார்க்கல் என அனைவரையும் அடித்து நொறுக்கினார். வேயன் பர்னல் பந்து வீச்சு சின்னாபின்னமானது. சுழற்பந்து வீச்சையும் அவர் விட்டு வைக்கவில்லை.

ரோஹித் சர்மா டக் அவுட் ஆன பிறகு கோஹ்லியும், தவானும் ஜோடி சேர்ந்தனர். கோஹ்லி 46 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆகி விட்டார். தொடர்ந்து ஷிகர் தவான் அதிரடியாக ஆடினார். 137 ரன்கள் எடுத்த நிலையில் தவான் ஆட்டமிழந்தார்.
முன்னதாக ரசிகர்களை உற்சாகப்படுத்திய வண்ணம் ரன்களைக் குவித்து வந்த ஷிகர் தவான் - விராத் கோஹ்லி ஜோடி 127 ரன்கள் சேர்த்து பிரிமந்தது. 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இம்ரா் தாஹிர் பந்து வீச்சில் விராத் கோஹ்லி ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை தவிடுபொடியாக்கி இந்த ஜோடி பிரமாதமாக ரன் குவித்தது. தவானும், கோஹ்லியும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 127 ரன்களைக் குவித்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் தடுமாறிப் போய் விட்டனர்.

27.1வது ஓவரில் தாஹிர் வீசிய கோஹ்லி அடிக்க, அதை டூபிளஸிஸ் கேட்ச் செய்து கோஹ்லியை வெளியேற்றினார். ரோஹித் சர்மா ரன் அவுட் சற்று பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், விராத் கோஹ்லியுடன் இணைந்து ஷிகர் தவான் சிறப்பாக ஆடி வந்தார். சிறப்பாக ஆடி வந்த இந்த ஜோடி பிரிந்த இந்திய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு அச்சுறுத்தும், பயமுறுத்தும் என்று எதிர்பார்க்ப்பட்ட நிலையில் அதை தவானும், ரஹானேவும் நையப்புடைத்து விட்டனர். தவான் போன பிறகு இந்தியாவின் ரன் வேகம் குறைந்தது. ரஹானே அதிரடியாக ஆடி வந்த நிலையில் அவர் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்தவர்கள் அடித்து ஆடுவதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. டோணி மட்டும் சற்று அதிரடியாக ஆடி 18 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதில் தொடர்ச்சியாக அவர் 3 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.

கடைசி நேர சொதப்பல் காரணமாக இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்களை எடுத்தது.
ஷிகர் தவான் ஆட்ட நாயகன்
137 ரன்கள் எடுத்து இந்தியாவை பேட்டிங்கில் நிமிர வைத்த ஷிகர் தவான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.