ஷபாலி வர்மா அதிரடி.. இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.. ஆசிய கோப்பையில் வங்கதேசம் படுதோல்வி
துபாய்: 2026 மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. துபாயில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார்.
மெதுவான ஆடுகளத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 40 பந்துகளில் 3 சிக்சர்கள் உட்பட 64 ரன்கள் குவித்து அசத்தினார். வங்கதேச வீராங்கனைகள் நழுவவிட்ட 3 கேட்ச் வாய்ப்புகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய ஷபாலி, எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். பிரதிகா ராவல் 20 ரன்களும், ரிச்சா கோஷ் 21 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் எடுத்தனர்.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச மகளிர் அணியால், இந்திய அணியின் துல்லியமான சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. துவக்க வீராங்கனைகள் திலாரா அக்தர் 21 ரன்களிலும், ஜுவைரியா பெர்தௌஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கிராந்தி கவுட் ஓடிவந்து பிடித்த அபாரமான கேட்ச் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தீப்தி சர்மா 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்ரீ சரணி மற்றும் பிரேமா ராவத் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
ஏற்கனவே 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ள இந்திய மகளிர் அணி மீண்டும் ஆசிய கோப்பையை வென்று சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications

