பெர்த் : இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் முதல், இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறுவதற்காக மூன்றாவது ஒருநாள் போட்டியில் பெர்த் நகரில் களம் இறங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணியில் முன் வரிசை வீரர்கள் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் 78 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய மகளிர் அணி தடுமாறியது. இதனை அடுத்து நடுவரிசையில் களமிறங்கிய அனாபெல் சதர்லாந்து அபாரமாக விளையாடி 110 ரன்கள் குவித்தார்.
இதேபோன்று ஆஸ்லீக் கார்ட்னர் அரைசதமும் கேப்டன் தஹிலா மெகராத் 56 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் அருந்ததி ரெட்டி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதை அடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களம் இறங்கியது. ஸ்மிருதி மந்தனா அபாரமாக விளையாட மற்ற வீராங்கனைகள் அவருக்கு துணை நிற்காமல் அடுத்தடுத்து வெளியேறினர்.
தொடக்க வீராங்கனை ரிச்சா கோஸ் இரண்டு ரன்களிலும்,ஹார்லின் தியோல் 39 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 12 ரன்களும், ஜெமிமா ரூட்ரிகியூஸ் 16 ரன்களும் எடுக்க அபாரமாக விளையாடிய ஸ்மிருதி மந்தானா 109 பந்துகளில் 105 ரன்கள் விளாசினார். இதில் 14 பவுண்டர்களும், ஒரு சிக்சரும் அடங்கும்.
ஒரு கட்டத்தில் ஸ்மிருதி மந்தனா ஆட்டம் இழக்க, அதன் பிறகு களம் இறங்கிய மற்ற இந்திய வீராங்கனைகள் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய மகளிர் அணி 45 புள்ளி ஒரு ஓவரில் 215 ரன்களில் ஆல் அவுட் ஆனாது. பேட்டிங்கில் அரைசதம் விளாசிய ஆஸ்லெக் கார்ட்னர் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா மகளிர் அணி மூன்றுக்கு 0 என்ற கணக்கில் தொடரை ஒயிட்வாஷ் செய்தது.