சென்னை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்த நிலையில் கேப்டன் ஹர்மன்பிரீத் சென்னையில் வேலம்மாள் மற்றும் சத்தியபாமா பல்கலைக்கழகம் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்காக சென்னை வந்த ஹர்மன்பிரீத் கவுருக்கு பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பை ரசிகர்கள் அளித்தனர்.
அப்போது வீராங்கனைகள் பூங்கோத்து கொடுத்து ஹர்மன்பிரீத்தை வரவேற்றனர். இதை தொடர்ந்து பள்ளி மாணவிகளுடன் ஹர்மன்பிரீத் கிரிக்கெட் விளையாடினார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுடன் பேசிய ஹர்மன்பிரீத், அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி எவ்வளவு பலம் வாய்ந்ததாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும்.

அதற்காக நாங்கள் முன்கூட்டியே தயாராக இருந்தோம். நான் பேட்டிங் செய்யும்போது நிலைமை மிகவும் கடினமாக இருந்தது. எனினும் என்னுடைய பொறுப்புகளை உணர்ந்து என்னை நானே அமைதிப்படுத்திக் கொண்டு களத்தில் விளையாடினேன். அரையிறுதியில் ஜெமிமாவுடன் நாங்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமாக மாறியது.
ஜெமிமாவும் நம்பிக்கையுடன் இருந்தார். நாங்கள் நல்ல மனநிலையுடன் தொடர்ந்து சண்டையிட்டு வெற்றி பெற்றோம். உலகக் கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று எங்களுக்கு தெரியும். உலகக் கோப்பையை வெல்லாமல் இருந்தது எங்களுக்குள் ஒரு வெறுமை உணர்வு இருந்தது.
தற்போது எங்களுடைய குறிக்கோளை நாங்கள் அடைந்து விட்டோம். இந்த வெற்றி பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. நாங்கள் இனிமேல் அதிக போட்டிகளை நடத்த கேட்போம். எங்களுக்கும் அதிக போட்டிகள் கிடைக்கின்றது. தற்போது அதிக பெண்கள் கிரிக்கெட் மைதானத்தை நோக்கி வரவேண்டும்.
ஆடவர் கிரிக்கெட்டில் எப்படி கடும் போட்டி இருக்கிறதோ, அதை போல் இந்திய மகளிர் அணியிலும் இடம் பிடிக்க நீங்கள் போட்டி போட வேண்டும். அப்போதுதான் பலமான அணியை உருவாக்க முடியும். பல குழந்தைகள் இனி கிரிக்கெட் அகாடமியில் சேர போவதாக எனக்கு மெசேஜ் அனுப்பினார்கள். இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம்.
பெண்களை கிரிக்கெட் நோக்கி வரவழைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய குறிக்கோளாக இருந்தது என்று ஹர்மன்பிரீத் தெரிவித்தார். அப்போது மாணவி ஒருவர் உங்களுக்கு தோனியை பிடிக்குமா? விராட் கோலியை பிடிக்குமா? என்று கேள்வி கேட்க அதற்கு அவர் தோனியை தமக்கு மிகவும் பிடிக்கும் என்றார். இதேபோன்று இந்திய அணியின் தொடக்க வீரர் சேவாக் தமக்கு மிகப்பெரிய ரோல் மாடலாக இருந்ததாகவும், அவர் தம்மிடம் உங்கள் குறிக்கோளை அடைய கடுமையாக முயற்சி செய்யுங்கள் என்று கூறியதாகவும் ஹர்மன்பிரீத் தெரிவித்துள்ளார்.