பெங்களூர்: நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டித்தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது இந்தியா.
மித்தலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் இரு போட்டிகளிலும் இந்தியா தோற்ற நிலையில், அடுத்த இரு போட்டிகளிலும் அபாரமாக ஆடி வென்றது.

கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும், கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாசில் வென்று, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, இந்திய பந்து வீச்சில் நிலை குலைந்து, 41 ஓவர்களில், 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஜுலன் கோசுவாமி, ராஜேஸ்வரி மற்றும் தீப்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எளிய இலக்கை பின்தொடர்ந்த இந்திய அணி, 136 பந்துகள் எஞ்சியிருக்கும்போதே, 1 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றிக் கனியை எட்டிப்பிடித்தது. தொடக்க வீராங்கனை காமினி அதிகபட்சமாக 62 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருந்தார். தீப்தி 44 ரன்களுடன் களத்தில் நின்றார்.