மும்பை: ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் ஆசிய அணி உலக அளவில் நான்காவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது. ஏற்கனவே உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு 51 கோடி ரூபாய் பரிசு தொகையை பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய மகளிர் அணிக்கு 40 கோடி ரூபாய் பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டது. இதுபோன்று இமாச்சலப் பிரதேச மாநிலத்திலிருந்து விளையாடிய வீராங்கனை ரேணுகா தாக்கூருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசை அம்மாநில அரசு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தானா, ஜெமிமா மற்றும் ராதா யாதவ் ஆகிய மூன்று வீராங்கனைகள் உலக கோப்பையை வென்ற நிலையில் மகராஷ்டிரா மாநில அரசு மூன்று வீராங்கனைகளுக்கும் தலா 2 கோடியே 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கி இருக்கிறது.
இதேபோன்று மும்பையைச் சேர்ந்த பயிற்சியாளர் அமோல் முசும்தாருக்கும் 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று இந்திய வீராங்கனை கிராந்திக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையை மத்திய பிரதேச அரசு அறிவித்து இருக்கிறது. பஞ்சாப்பை சேர்ந்த கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர், அம்ஜோத் கவுருக்கு தலா 11 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர் பாலிக்கு 5 லட்சம் ரூபாயும் பஞ்சாப் கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்திருக்கிறது.