மும்பை: இந்திய மகளிர் அணி, ஐசிசி உலக கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது இத்தனை ஆண்டுகளாக கடுமையாக போராடியும் தற்போது தான் இந்த கனவு இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு நிறைவேறி இருக்கிறது. இதற்கு வீராங்கனைகளின் திறமை முதன்மையான காரணமாக இருந்தாலும், இந்த கனவை கட்டி பாதுகாத்தது யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஒரு அணியில் திறமையான வீராங்கனைகள் இருந்தால் மட்டும் கோப்பையை வென்று விட முடியாது. அதற்கு மேல் பல விஷயங்கள் இருக்கின்றது. குறிப்பாக ஒரு அணி என்றால் ஒற்றுமை இருக்க வேண்டும். இந்த ஒற்றுமை இல்லாமல் இந்திய மகளிர் அணி பல உலக கோப்பையை இழந்திருக்கிறது.

குறிப்பாக 2020 டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் களமிறங்கியது. அப்போது அணியில் ஏற்பட்ட உச்சகட்ட அரசியல் காரணமாக நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் ஓரங்கட்டப்பட்டார். இதன் காரணமாக இந்திய அணி தோல்வியை தழுவியது. அதற்கு முக்கிய காரணம் அப்போதைய பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவார்.
இப்படி தான் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் உள்ளடி வேலைகள் நடந்தால்தான் பெரிய அளவு நமது வீராங்கனைகளால் சாதிக்க முடியவில்லை. இதை முதன் முதலில் உடைத்தவர் அமோல் முசும்தார். மும்பையைச் சேர்ந்த 50 வயதான இவர் சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஷ்மன் போன்ற ஜாம்பவான்கள் விளையாடிய காலத்தில் பிறந்ததால் இந்திய அணிக்காக ஒரு முறை கூட விளையாட முடியவில்லை.
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 30 சதம், அரை சதம் என பட்டையை கிளப்பிய அமோல் முசும்தார், ஒருமுறை கூட இந்திய அணியில் விளையாட முடியவில்லை. இப்படி இருக்கும் போது தான் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பு அமோல் முசும்தாருக்கு வந்தது. எப்படி சக் டே இந்தியா திரைப்படத்தில் ஷாருக்கான் சாதிக்க முடியாமல் பயிற்சியாளராக மாறி அணியை வழிநடத்தி வெற்றியை தேடி தந்தாரோ, அதேபோல் தான் அமோல் முசும்தார் ஒரு வீரராக சாதிக்க முடியாததை பயிற்சியாளராக சாதித்து காட்டி இருக்கிறார்.
நம்மிடம் திறமை அதிகமாக இருக்கிறது. ஆனால் சாம்பியன் ஆவதற்கான சில தகுதிகள் இல்லை என்பதை கண்டறிந்த அமோல் முசும்தார், வீராங்கனைகளின் உடல் தகுதியை அதிகரிப்பதே இதற்கு முதல் தீர்வு என்பதை முடிவு செய்தார். இதன் மூலம் இந்திய வீராங்கனைகள் ஆண்களுக்கு நிகரான உடல் அமைப்பை பெற வேண்டும் என்பதை முடிவெடுத்த அமோல் முசும்தார் உடல் தகுதியில் கவனம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே அணியில் இடம் என்று வீராங்கனைகளிடம் தெரிவித்திருக்கிறார்.
இதேபோன்று இந்த அணி கண்டிப்பாக பெரிய சாதனையை செய்யும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது என ஒவ்வொரு முறையும் தம்மால் முடிந்த ஊக்கத்தை இந்திய மகளிர் அணிக்கு வழங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அணியில் இருக்கும் அரசியலை அடித்து நொறுக்கிய அமோல் முசும்தார், வீராங்கனைகள் ஒருவருக்கொருவர் துணையாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும்.
ஒருவரின் வெற்றியை மற்றொருவர் கொண்டாட வேண்டும். தோல்வியில் தோள் கொடுக்க வேண்டும் என்ற கலாச்சாரத்தை இந்திய மகளிர் அணியின் கொண்டு வந்தார். இந்த காலகட்டத்தில் தான் மகளிர் பிரிமியர் லீக் தொடர், வீரர்களுக்கு ஈடான சம்பளம் என பல நல்ல விஷயங்களை நடந்தது. இது அனைத்தும் ஒருங்கிணைந்து இந்திய மகளிர் அணி தற்போது கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த அமோல் முசும்தார் இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராகவும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.