மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது. டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், ஒருநாள் தொடரில் 3 - 0 என ஆஸ்திரேலியா வென்று இருந்தது. ஒருநாள் தொடரின் மோசமான தோல்விகளுக்கு பழி தீர்க்க காத்திருந்த இந்திய மகளிர் அணி முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை கதிகலங்க வைத்தது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரேணுகா சிங், டிடாஸ் சாது, ஸ்ரேயங்கா பாட்டில், தீப்தி சர்மா ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்து வீசியதுடன் விக்கெட்களை அள்ளினர். அதிலும் சாது உச்சகட்டமாக 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். ரேணுகா சிங் 1, ஸ்ரேயங்கா பாட்டில் 2, தீப்தி சர்மா 2, அமன்ஜோத் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியுடன் சேர்த்து 14 டி20களில் மட்டுமே ஆல் - அவுட் ஆகி இருக்கிறது. அந்த அளவுக்கு இந்திய ஆணி சிறப்பாக பந்து வீசி இருந்தது. அடுத்து சேஸிங்கில் இந்தியா எங்காவது தடுமாறும் என எதிர்பார்த்த ஆஸ்திரேலிய அணிக்கு அங்கும் ஏமாற்றமே கிடைத்தது.
இந்திய அணிக்கு துவக்கம் அளித்த ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா அதிரடி ஆட்டம் ஆடி வேகமாக ரன் குவித்தனர். மந்தனா 52 பந்துகளில் 54 ரன்கள் ,குவித்து 15.2 ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. அடுத்து கடைசி வரை நின்ற ஷபாலி 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.