மும்பை : இந்திய மகளிர் கிரிக்கட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது சிறப்பாக விளையாடி வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய மகளிர் அணி எப்போதுமே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளிடம் போராடி தோல்வியை தழுவும்.
இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை அபாரமாக வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி விளையாடியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 219 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் இந்திய வீராங்கனை பூஜா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது. இதில் தொடக்க வீராங்கனையாக களமிறங்க செபாலி சர்மா 59 பந்துகளின் 40 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். இதேபோன்று நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தானா அபாரமாக விளையாடி 66 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 74 ரன்கள் எடுத்து இந்த போது ஸ்மிருதி மந்தானா ரன் அவுட் ஆனார். சினே ரானா ஒன்பது ரண்களில் வெளியேற ரிச்சா கோஸ் மற்றும் ஜெமிமா ரோட்ரிகியூஸ் ஆகியோர் தற்போது இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். 52 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்திருந்தது.
இது ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 26 ரன்கள் தான் குறைவாகும். கையில் 7 விக்கெட்டுகள் இருப்பதால் இந்திய அணி ஆஸ்திரேலிய முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட அதிக ரன்கள் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இருக்கிறது.