மும்பை : இந்திய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 347 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இங்கிலாந்து அணி.
அந்த இமாலய தோல்விக்கு பின் இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹீதர் நைட், இந்திய வீராங்கனைகள் ஆட்டம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இந்திய மகளிர் அணி - இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையே ஒரு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது. சுமார் ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் மகளிர் டெஸ்ட் போட்டி நடந்ததால் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

நான்கு நாள் கொண்ட இந்த மகளிர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி பேட்டிங்கில், இங்கிலாந்து அணியை மிரள வைத்தது. முதல் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது இந்திய அணி. மகளிர் டெஸ்ட் வரலாற்றில் ஒரே நாளில் 400 ரன்களுக்கும் மேல் எடுத்த இரண்டாவது அணி என்ற சாதனையை இந்திய அணி செய்தது.
அடுத்து முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 428 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் சதீஷ் சுபா 69, ஜெமிமா ரோட்ரிகஸ் 68, யாஸ்திகா 66, தீப்தி சர்மா 67 ரன்கள் என நான்கு பேர் அரைசதம் அடித்தனர். அடுத்து இங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்க்ஸில் 136 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆனது. இந்தியா தன் இரண்டாவது இன்னிங்க்ஸில் 186 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 478 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்த படுதோல்விக்கு பின் பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட், இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்ததை பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது என கூறினார்.
ஹீதர் நைட் இந்திய அணி குறித்து பேசுகையில், "இந்தியா அபாரமாக ஆடியது. அவர்கள் முதல் இன்னிங்க்ஸில் ஆடியதைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவர்கள் ஆடிய விதத்துக்கு அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இந்தியாவின் இந்த சூழ்நிலைகள் எங்களுக்கு பழக்கமானது அல்ல. எங்களுக்கு இந்த போட்டி நிறைய படிப்பினைகளை கொடுத்துள்ளது. இந்தியாவில் எப்படி ஆட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டி இருக்கிறது" என்றார்.