88 வருட கிரிக்கெட் வரலாற்றை புரட்டிப் போட்ட இந்திய மகளிர் அணி.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இமாலய சாதனை
மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 88 ஆண்டுகள் கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த மகளிர் அணியும் செய்யாத சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.
இங்கிலாந்து மகளிர் அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட சிறிய தொடரில் இந்திய மகளிர் அணி ஆடி வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 410 ரன்கள் குவித்தது.
சுமார் 88 ஆண்டுகளுக்கு பின் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் அன்று ஒரே அணி 400 ரன்களுக்கு மேல் ரன் குவித்தது பெரும் வரலாற்று சாதனை ஆகும். அந்த சாதனையை இந்திய மகளிர் அணி செய்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் நான்கு வீராங்கனைகள் அரைசதம் அடித்தனர். தங்களின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய சதீஷ் சுபா 69 ரன்களும், ஜெமிமா ரோட்ரிகஸ் 68 ரன்களும் குவித்தனர். அடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். யாஸ்திகா பாட்டியா 66, தீப்தி சர்மா 60* ரன்கள் குவித்தனர்.
இந்திய அணி முதல் ஆட்டத்தின் முடிவில் 94 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 410 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் அதிக ரன் குவித்த மகளிர் அணி என்ற பெருமையை பெற்றது இந்திய மகளிர் அணி.
அத்துடன் 1934க்கு பின் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் 400 ரன்களுக்கும் மேல் குவித்த இரண்டாவது அணி என்ற வரலாற்று சாதனையை செய்தது இந்திய மகளிர் அணி. 1934 ஆம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 44 ரன்களில் ஆல் - அவுட் ஆன நிலையில், அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாளின் முடிவில் 431 ரன்கள் குவித்தது. அதை அடுத்து தற்போது இந்திய மகளிர் அணி ஒரே நாளில் 410 ரன்கள் குவித்துள்ளது.
இதை தவிர்த்து இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி தன் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் முதல் இன்னிங்க்ஸில் 525 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக உள்ளது. இன்னும் 3 விக்கெட்கள் கையில் இருப்பதால், இந்திய அணி அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications