பாகிஸ்தானை பந்தாடிய இந்திய மகளிர் படை - டி20 உலக கோப்பையில் தீப்தி சர்மா வரலாற்று சாதனை!
பெர்மிங்காம்: மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்திய இந்திய வீராங்கனைகள், தங்களது பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி எளிய வெற்றியைப் பெற்றுள்ளனர்.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பம் சற்று ஏமாற்றமாகவே அமைந்தது. தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா மற்றும் ஒன்-டவுன் பேட்டராக களம் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிதானமாகவும் அதேவேளையில் அதிரடியாகவும் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

அபாரமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 32 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். மந்தனா, ரமீன் ஷமீம் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது.
அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது. குறிப்பாக, இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியின் ரன் வேகத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தினர். இதனால் பாகிஸ்தான் அணி 16.6 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றிய தீப்தி சர்மா, 4 ஓவர்கள் பந்துவீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். போட்டியின் 17-வது ஓவரை வீசிய தீப்தி சர்மா, அந்த ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். நஷ்ரா சந்துவை வீழ்த்திய கடைசி விக்கெட்டின் மூலம், மகளிர் டி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை தீப்தி சர்மா தன்வசப்படுத்தியுள்ளார்.
தீப்தி சர்மாவுக்கு பக்கபலமாக பந்துவீசிய ஸ்ரீ சாருனி, 4 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சியை துரிதப்படுத்தினார். பாகிஸ்தான் வீராங்கனை அலியா ரியாஸ் கொடுத்த ரன் அவுட் வாய்ப்பை ரிச்சா கோஷ் தவறவிட்டாலும், பீல்டிங்கில் ராதா யாதவ் எல்லைக் கோட்டுக்கு அருகே பாய்ந்து தடுத்து ரன்களைக் கட்டுப்படுத்தியது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமைந்தது.சிறப்பான பந்துவீச்சு, மிரட்டலான பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கின் மூலம் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணி இந்த உலகக் கோப்பை தொடரை வெற்றியோடு தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications

