மும்பை: ஐசிசி ஒருநாள் போட்டிக்கான மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு முதல் முறையாக தற்போது இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாட திரும்பியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய மகளிர் அணி இலங்கையை 121 ரன்கள் மட்டுமே எடுக்க விட்டது. இதனை அடுத்து இந்த இலக்கை 14 புள்ளி நான்கு ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய மகளிர் அணி எட்டியது.

போட்டிக்கு பின்பு பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் செயல்பட்ட விதம் திருப்தி அளிக்கிறது. ஆனால் பில்டிங்கில் நாங்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் கடினமாக உழைத்து வருகின்றோம். ஆனால் எதனால் கேட்சை நாங்கள் விட்டோம் என்று எனக்கு தெரியவில்லை.
ஆம் பந்து ஈரமாகத்தான் இருக்கின்றது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் இதையெல்லாம் ஒரு காரணமாக சொல்லக்கூடாது. கள சூழல் எவ்வாறு இருக்கும் என்று நமக்கு தெரியும். இதுபோன்று கேட்ச்களை முக்கிய ஆட்டத்தில் விட்டால், அது வெற்றி வாய்ப்பை வெகுவாக பாதிக்கும். நாங்கள் ஒரு மாதம் கழித்து தற்போது கிரிக்கெட் விளையாடுகின்றோம்.
எந்த கள சூழலாக இருந்தாலும் சரி, நாம் செய்ய வேண்டியதை சரியாக செய்ய வேண்டும். முதலில் நாங்கள் பந்து வீச முடிவு எடுத்து இருந்தோம். அதுதான் திட்டமாக இருந்தது என்று ஹார்மன்பிரீத் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய இலங்கை அணி கேப்டன் சம்மாரி அட்டப்பட்டு, 120 ரன்கள் என்பது நல்ல இலக்கு கிடையாது.
அதனை தற்காத்துக் கொள்ள கடினமாக இருந்தது. அடுத்த போட்டியில் நிச்சயம் நாங்கள் மீண்டும் திரும்பி வருவோம். போட்டியில் நாங்கள் பல தவறுகளை செய்தோம். இதுபோன்ற சூழலுக்கு நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். பனிப்பொழிகிறது என்று குறை சொல்லக்கூடாது. அடுத்தடுத்த போட்டிகளில் எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடுவோம் என்று நம்புகிறோம்.
சில விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்க்க வேண்டும். பேட்டிங்கில் நாங்கள் தற்காப்பு ஆட்டமாக விளையாடுகிறோம். டி-20 கிரிக்கெட்டில் அது வேலைக்கு ஆகாது. கேப்டனாக முன் நின்று அணியை வழிநடத்த விரும்புகின்றேன். துரதிஷ்டவசமாக நான் இன்று விரைவில் ஆட்டம் இழந்து விட்டேன். எனினும் எனது அணியின் இளம் வீராங்கனைகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அடுத்தடுத்த போட்டிகளில் சிறந்த கிரிக்கெட்டை அவர்கள் விளையாடுவார்கள் என நான் நம்புகிறேன் என்று சம்மாரி அட்டப்பட்டு கூறினார்.