200+ ரன்.. உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி வரலாற்றுச் சாதனை.. நெதர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி
லீட்ஸ்: 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 200 ரன்களைக் கடந்ததன் மூலம் மாபெரும் வரலாற்றுச் சாதனையை இந்திய மகளிர் அணி படைத்துள்ளது. இப்போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றியும் பெற்றது.
இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நேற்று (புதக்கிழமை) நடைபெற்ற குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்து உலகக் கோப்பை வரலாற்றில் தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி மட்டுமே உலகக் கோப்பையில் 200 ரன்களைக் கடந்த ஒரே அணியாக இருந்தது. தற்போது இந்த அரிய சாதனையைப் படைத்த உலகின் 2வது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இந்திய அணி தரப்பில் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஜோடி அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 11.4 ஓவர்களில் 115 ரன்கள் குவித்தது. மந்தனா 47 பந்துகளில் 74 ரன்களும், ஷஃபாலி வர்மா 38 பந்துகளில் 55 ரன்களும் விளாசினர். இறுதி நேரத்தில் ரிச்சா கோஷ் (8 பந்துகளில் 20 ரன்கள்) மற்றும் தீப்தி சர்மா (2 பந்துகளில் 10 ரன்கள்) அதிரடி காட்ட, இந்தியா 209 ரன்களை எட்டியது.
பின்னர் 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.3 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நெதர்லாந்து கேப்டன் பாபெட் டி லீடே அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். அறிமுகப் போட்டியில் விளையாடிய நந்தினி சர்மா மற்றும் ஸ்ரீ சரணி ஆகியோர் தலா விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
ஆட்டத்தின் போது இந்திய ஸ்பின்னர் ஸ்ரேயங்கா பாட்டீல் தனது முதல் பந்திலேயே கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்திலிருந்து ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டது அணிக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி ஜூன் 21 அன்று மான்செஸ்டரில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications
