நாட்டிங்காம்: இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
5 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்பதற்காக டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

இதன்படி இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் சார்பில், 11 பேர் கொண்ட அணி போட்டி தொடங்குவதற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, முரளி விஜய், ஷிகர் தவான், புஜாரா, விராட் கோஹ்லி, ரகானே, ரவீந்திரஜடேஜா, டோணி, ஸ்டூவர்ட் பின்னி, பிரவீன்குமார், இசாந்த் ஷர்மா, முகமது சமி ஆகியோர் களம் கண்டுள்ளனர்.
வங்கதேசத்துடனான ஒருநாள் போட்டித்தொடரில் கலக்கிய பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பின்னி, இன்றைய போட்டியின் மூலம், முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் கால்பதித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் சார்பில் அதன் கேப்டன் அலஸ்டயர் குக், சாம் ராப்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஜோ ரூட், மொயீன் அலி, மேத் பிரையர் , ஸ்டோக்ஸ், பிராட், புளுன்கெட், ஆன்டர்சன் ஆகியோர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் மட்டும் இதுவரை 52 டெஸ்டில் விளையாடி அதில் 5-ல் மட்டுமே (27 தோல்வி, 20 டிரா) வெற்றி பெற்றிருப்பது கவனித்தக்க அம்சமாகும்.