ஹராரே: முதல் ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, இன்று ஹராரேயில் நடந்த 2வது போட்டியிலும் கேவலமான முறையில் தோல்வியைச் சந்தித்தது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி இந்தியாவை முதலில் பேட் செய்யப் பணித்தது. முரளி விஜய்யும், திணேஷ் கார்த்திக்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த முறையும் விஜய் ரன் குவிக்கத் தவறினார். 56 பந்துகளைச் சந்தித்த அவர் வெறும் 21 ரன்களை மட்டுமே எடுத்தார்.
திணேஷ் கார்த்திக் 47 பந்துகளைச் சந்தித்து 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராத் கோலி 18, ரோஹித் சர்மா 13 ஆகியோர் சொற்ப ரன்களில் விழுந்தனர். ரோஹித் சர்மா அவுட் ஆனதுமே இந்தியா பெரிய ஸ்கோரை எட்டாதோ என்ற சந்தேகம் வந்து விட்டது.
கேப்டன் சுரேஷ் ரெய்னா 3 ரன்களில் சுருள இந்தியாவின் நிலை இக்கட்டானதாக மாறியது. ரவீந்திர ஜடேஜா மட்டு்மே சற்று நிதானத்துடன் ஆடி 51 ரன்களைச் சேர்த்தார். இதுதான் இந்திய அணியின் அதிகபட்ச தனி நபர் ஸ்கோராகும்.
இறுதியில், 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்த இந்தியா 194 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
ஜிம்பாப்வே தரப்பில் லாம்ப் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்களைய் சாய்த்தார். பிளிக்னாட், பிரைஸ், உத்சயா,கிரெமர் ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
பின்னர் ஜிம்பாப்வே அணி விளையாடத் தொடங்கியது. இந்தியப் பந்து வீச்சு இன்றும் மோசமாக இருந்தது. ஏதோ பிராக்டிஸில் பந்து வீசுவது போல இந்திய பவுலர்கள் பந்துகளை போட்டபடி இருந்தனர். ஜிம்பாப்வே வீரர்களை இந்தியப் பந்து வீச்சு ஒரு வகையிலும் பாதிக்கவில்லை.
விக்கெட்களை வீழ்த்த வேண்டும் என்ற இலக்குடன் இந்திய பந்து வீச்சாளர்கள் பந்து வீசியதாக தெரியவில்லை. ரன்களைக் குறைத்துக் கொடுத்தார்களே தவிர விக்கெட்கள் விழாமல் ஜிம்பாப்வே பேட்டிங் இந்திய பவுலர்களை வெகுவாக சோதித்து விட்டது.
வெற்றி இலக்கு மிகவும் சிறியது என்பதால் நிதானமாக ரன் சேர்க்க ஆரம்பித்தனர் ஜிம்பாப்வே தொடக்க ஆட்டக்காரர்களான ஹாமில்டன் மஸகட்ஸாவும், பிரன்டன் டெய்லரும். அழகாக ஆடிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 128 ரன்களைக் குவித்தனர்.
பிரன்டன் டெய்லர் சிறப்பாக ஆடி 74 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் ஒரு சிக்சரும், 6 பவுண்டரிகளும் அடக்கம்.
அவர் போனாலும் மஸகட்ஸாவின் ஆட்டம் தொடர்ந்தது. 86 பந்துகளைச் சந்தித்த அவர் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 66 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களம் இறங்கிய சார்லஸ் கோவன்ட்ரி விறுவிறுப்பாக ஆடி 20 ரன்களைக் குவித்த நிலையில் ஜடேஜா பந்தில் வீழ்ந்தார்.
இதையடுத்து வெற்றி இலக்கை எட்டும் வேலையை கேப்டன் சிகும்பராவும், விக்கெட் கீப்பர் தைபுவும் கையில் எடுத்துக் கொண்டனர். அதிரடியாக ஆடிய சிகும்பரா 15 பந்துகளில் 16 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தைபுவும் 17 பந்துகளில் 13 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
38.2 ஓவர்களிலேயே ஜிம்பாப்வே அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 197 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவைப் போல சாதாரண வீரர்களையே கொண்டுள்ள இலங்கையால் ஜிம்பாப்வேயை எளிதில் வெல்ல முடிந்தபோது, இந்தியா இப்படி அடுத்தடுத்து 2 போட்டிகளில் ஜிம்பாப்வேயிடம் தோல்வியைத் தழுவியிருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.