மொகாலி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி108 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சுழற்பந்து வீச்சு ஆதிக்கம் செலுத்திய இந்த டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிவுக்கு வந்தது.
இந்த வெற்றியின் மூலம், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா, 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மொகாலியில் வியாழக்கிழமை தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டியில் டாசில் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
முதல் நாள் டீ இடைவேளை முடிந்த சில நிமிடங்களிலேயே 201 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்தது. நேற்றைய மதிய உணவு இடைவேளை முடிந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அந்த அணி 184 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 17 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்திய தரப்பில் அஸ்வின் அபாரமாக பந்து வீசி 51 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ரவீந்திர ஜடேஜா 3, அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதையடுத்து இந்தியா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. எனவே முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து இந்தியா, 142 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
புஜாரா 63 ரன்களுடனும், கேப்டன், கோஹ்லி 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று காலை ஆட்டம் தொடங்கியது முதல் இந்த ஜோடி அச்சமின்றி அடித்து ஆடியது. ஆனால், ஸ்கோர் 161ஆக உயர்ந்தபோது கோஹ்லி 29 ரன்களில் அவுட் ஆனார். 164 ரன்னாக ஸ்கோர் இருந்தபோது புஜாரா 77 ரன்களில் அவுட் ஆனார்.
இதையடுத்து இந்திய பேட்ஸ்மேன்கள் பெவிலியனை நோக்கி பரேட் நடத்த தொடங்கினர். மைதானத்திற்குள் வருவதும் பெவிலியன் திரும்புவதுமே அவர்கள் பணியாக இருந்தது.
ரஹானே 2, ஜடேஜா 8, அமித்மிஸ்ரா 2, அஸ்வின் 3 ரன்களில் அடுத்தடுத்து வெளியேறியதால், இந்திய அணி உணவு இடைவேளை முடிந்த சில நிமிடங்களில் 200 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. போராட்டம் நடத்திய விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா கடைசி விக்கெட்டாக 20 ரன்களில் வெளியேறினார்.
கடைசி 39 ரன்கள் சேகரிப்பதற்குள் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஸ்பின்னர்கள்தான் அதிக விக்கெட்டுகளை பறித்தனர். சிமோன் ஹார்மர் மற்றும் இம்ரான் தாஹீர் ஆகிய ஸ்பின்னர்கள் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஒருகட்டத்தில் 300 ரன்கள் முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் போக்கு, 2 மணி நேரங்களில் மொத்தமாக மாறிவிட்டது. இதனால் தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 218 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எளிதான இலக்காக தெரிந்தாலும், சுழற்பந்துக்கு மிகவும் அதிகமாக ஒத்துழைத்த மொகாலி பிட்சில் அதை எட்டுவது சவாலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களோ, இந்திய ஸ்பின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சரணடைந்தனர்.
உணவு இடைவேளைக்கு சற்று பின்னர் பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, டீ இடைவேளைக்கு சற்று பின்னர் 109 ரன்களில் ஆல்-அவுட் ஆகிவிட்டது. இதனால் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ருசித்தது.
இந்திய தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஸ்டியான்வான் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது, ரவீந்திர ஜடேஜாவுக்கு கிடைத்தது. இந்திய மண்ணில் கோஹ்லி தலைமையில் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
60 sec: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி108 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சுழற்பந்து வீச்சு ஆதிக்கம் செலுத்திய இந்த டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிவுக்கு வந்தது. இந்திய மண்ணில் கோஹ்லி தலைமையில் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.