மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த தோல்விக்கு பவுலர்கள் ஒரு காரணமாக இருந்தாலும் முக்கிய காரணங்கள் இந்திய அணியின் கீழ் வரிசை வீரர்கள் பெரிய அளவு ரன்கள் சேர்க்காததுதான் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஐந்து சதங்கள் அடித்தும் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. கீழ் வரிசை வீரர்கள் குறைந்தபட்சம் ஒரு 100 ரன்களை சேர்த்து இருந்தால் கூட இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கும்.

இரண்டாவது இன்னிங்ஸில் சர்துல் தாக்கூர், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வெறும் ஐந்து ரன்களை மட்டும் தான் சேர்த்தார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணியின் பேட்டிங் வரிசையை டாபர்மேன் நாய் உடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.
டாபர் மேன் நாய்க்கு பொதுவாக வால் இருக்காது. இந்திய அணியில் கீழ் வரிசை வீரர்கள் சரியாக விளையாடாததால் அதனை டாபர்மேன் நாய் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பேசிய அவர், இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பார்த்தால் டாபர்மேன் நாய் போல் இருக்கின்றது.
அதன் தலைப்பகுதி நன்றாக இருக்கும். நடுப்பகுதி பரவாயில்லை என்பது போல் தோன்றும். ஆனால் அந்த நாய்க்கு வால் இருக்காது. அதுபோல்தான் இந்திய அணியின் பேட்டிங் வரிசை இருக்கிறது என்று கூறி கிண்டல் அடித்தார். இந்திய அணியின் கடைசி நான்கு வீரர்கள் 5 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் இங்கிலாந்து அணியின் கடைசி நான்கு வீரர்கள் மொத்தமாக 72 ரன்களை முதல் இன்னிங்ஸில் சேர்த்தார்கள்.
குறிப்பாக பும்ரா பந்துவீச்சில் களமிறங்கினாலும், கடந்த 2019 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து கணக்கிட்டால் 22 டக் அவுட் ஆகி இருக்கிறார். சிராஜ் 51 இன்னிங்சில் 12 டக் அவுட் ஆகி இருக்கின்றார். இதனால் ஜடேஜா சர்துல் தாக்கூர் ஆகியோரை நீக்கிவிட்டு நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.