
பேட்டிங்கில் கோட்டை விட்டது
நேற்று இந்தியா பேட்டிங்கில் நன்றாகவே துவங்கியது. ரோஹித் கொஞ்சம் சீக்கிரம் ஆட்டமிழந்தார். அடுத்து ராயுடு, தவான் கூட்டணி நிலைத்து நின்று ஆடியதால், ஆட்டம் 40 ஓவர்கள் வரை இந்தியாவின் கைகளில் தான் இருந்தது. முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ரோஹித், தவான், ராயுடு இல்லாத நிலையில், இந்திய அணியின் நடுவரிசை சொதப்பலை துவங்கியது. கடைசி 10 ஓவர்களில் தான் இந்தியா மோசமாக செயல்பட்டது.

நடுவரிசை மோசம்
தினேஷ் கார்த்திக் தேவையற்ற ஷாட் அடித்து ஆட்டமிழந்தார். தோனி பந்து எங்கே வருகிறது என தடவி, கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அனுபவ தோனி இப்படி தடுமாறுவதை பார்க்கவே முடியவில்லை. அடுத்து கேதார் ஜாதவ் மட்டுமே பேட்ஸ்மேன்களில் மீதம். அவர் விக்கெட்கள் விழுந்து வேறு நல்ல பேட்ஸ்மேன் இல்லாத நிலையில் சற்றே நிறுத்தி விக்கெட் போகாமல் ஆடினார். அந்த நிலையிலும் அவர் 27 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். ஆனால், அவரும் 47வது ஓவரில் 4 பந்துகளில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை. கொஞ்சம் தடுமாற்றத்துடன் தான் ஆடினார்.

விக்கெட் இல்லாத 34 ஓவர்கள்
நேற்று ஹாங்காங் அணியின் அன்ஷுமன் ராத் மற்றும் நிசாகத் கான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் கூட்டணியாக ரன் குவித்தனர். இதுவே ஹாங்காங் சார்பில் மிகப் பெரிய பார்ட்னர்ஷிப் ஆகும். இவர்கள் இருவரும் 34 ஓவர்கள் வரை இணைந்து ஆடினர். இந்திய பந்துவீச்சால் இவர்களை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பது அதிர்ச்சி தான்.

ஷர்துல் சேம் சைடு கோல்
நேற்று ஷர்துல் தாக்குர் மிக மிக மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். நேற்று எட்டாவது ஓவரை ஷர்துல்-இடம் அளித்தார் கேப்டன் ரோஹித். அவர் 2 ரன்கள் கொடுத்து நம்பிக்கை அளித்தார். ஆனால், அடுத்து 10 ஓவரில் 9 ரன்கள் கொடுத்தார். 12வது ஓவரில் என்ன ஆனதோ, 3 நோபால் வீசி வெறுப்பேற்றினார். மேலும் ஒரு வைடு வேறு. இடையே ஒரு சிக்சர். ஒரு நோபால் மிகவும் மேலே சென்று எந்த பீல்டர் கையிலும் சிக்காமல் இலவச பவுண்டரி ஆனது. அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் கொடுத்தார். அடுத்து, 31வது ஓவரை அவரிடம் அளித்துப் பார்த்தார் ரோஹித். அப்போதும் 13 ரன்கள் கொடுக்கவே, அடுத்து ஷர்துலுக்கு ஓவரே கொடுக்கவில்லை. அவரது ஓவர்களை கேதார் ஜாதவ் தன் சுழல் மூலம் நிரப்பினார். ஜாதவ் மிக சிறப்பாக வீசி குறைவான ரன்கள் தான் கொடுத்தார். ஆனால், விக்கெட்கள் கிடைக்கவில்லை.


Click it and Unblock the Notifications
