செல்ம்ப்ஸ்போர்டு: இங்கிலாந்து கவுன்டி அணியான எசக்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் 395 ரன்கள் எடுத்தது. எசக்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்து, இந்திய பந்து வீச்சாளர்களை திணறடித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதலில் நடந்த டி-20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. அடுத்து நடந்த ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் போட்டித் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது.

அதற்கு முன் மூன்று நாள்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எசக்ஸ் அணியுடன் இந்திய அணி விளையாடுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.
இரண்டாம் நாளான நேற்று இந்தியா 395 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தினேஷ் கார்த்திக் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹார்திக் பாண்டயா 51 ரன்கள் எடுத்தார். கடைசியில் ரிஷப் பந்து ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய எசக்ஸ் அணி ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. டாம் வெஸ்லி 57, மிக்கைல் கைல் பெப்பர் 68 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். காயம் காரணமாக அஸ்வின் பவுலிங் செய்யவில்லை.
முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஹார்திக் பாண்டயா, ஷர்துல் தாகுர், ரவீந்திர ஜடேஜா என 6 பேர் மாறி மாறி பந்து வீசினர். இதில் உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா மட்டுமே குறைந்த ரன்களை கொடுத்ததுடன் விக்கெட் வீழ்த்தினர். ஷர்துல் தாகுர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய பவுலர்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது.