மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி இழந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசிய பேச்சுகளை எல்லாம் ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தினார் ஹர்திக் பாண்டியா. இதன் காரணமாக இளம் கேப்டன் தலைமையில் டி20 அணியை கட்டமைக்க நினைத்த பிசிசிஐ, ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்தது. இதற்கு பின்னால் குஜராத் கிரிக்கெட் சங்கமும், ஜெய் ஷாவும் இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக மும்பை அரசியலில் சிக்கியிருந்த பிசிசிஐ, தற்போது குஜராத் அரசியலில் சிக்கி இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவுக்கான முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் தன்னை அடுத்த தோனியாக மாற்றுவதற்காக முயற்சியில் ஹர்திக் செயல்படுவதாகவும் முயற்சிகள் எழுந்தன.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக மும்பை அணியை வம்புக்கு இழுத்ததோடு, சென்னை அணியை பாராட்டி பேசி இருந்தார் ஹர்திக் பாண்டியா. இதே ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் இருக்கும் போது இப்படி பேசியதே இல்லை. தோனியின் மீதான அன்பை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி இருந்தாலும், மும்பை அணியை ஒருபோதும் குறைத்து பேசியதே இல்லை. அங்கேயே ஹர்திக் மீது பலரும் விமர்சனங்களை முன் வைக்க தொடங்கினார்கள்.
அதுமட்டுமல்லாமல் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இந்திய அணிக்காக 5 வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். அப்போது ஹர்திக் பாண்டியா, இந்தியாவால் இன்னும் 2 அணிகளை கூட உருவாக்க முடியும். அப்படி உருவாக்கி எந்த கோப்பையையும் எளிதாக வெல்ல முடியும் என்று கூறினார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆனால் அப்படி சொன்ன ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தொடரை இழந்து பரிதாமாக நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல், சும்மா இருந்த பூரனை என் பந்தில் முடிந்தால் அடிக்கட்டும் என்று உசுப்பேற்றிவிட்டார் ஹர்திக் பாண்டியா. நடந்து முடிந்த டி20 தொடரில் நிக்கோலஸ் பூரன் தான் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.
தற்போது தோல்வியடைந்த பின், சில நேரங்களில் தோல்விகளை அடைவதும் நல்லது தான். நமக்கு தோல்வியை விடவும் இலக்கை நோக்கிய பயணம் என்று தோனி கூறிய process வசனத்தை துணைக்கு வைத்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா. விராட் கோலி - ரவி சாஸ்திரி இருந்த போது ஒவ்வொரு தோல்விக்கும் இந்திய அணியை நோக்கிய கேள்விகள் எழும். ஆனால் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் டிராவிந்த வந்தபின் விமர்சனங்களும் குறைந்துள்ளது கண்கூடாக தெரிகிறது.