ட்ரினிடாட்: இந்திய அணியின் வரலாற்று சிறப்புமிக்க 200வது டி20 போட்டியில் கேப்டனாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, தேசிய கீதம் ஒலித்த போது கண்கலங்கி நின்ற காட்சி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு பின் டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. டெஸ்ட், ஒருநாள் தொடரை போலவே டி20 தொடரிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியதன் மூலம், இந்திய அணி 200வது டி20 போட்டியில் விளையாடி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றுள்ளார். அதேபோல் உலகக்கோப்பைத் தொடருக்கு தயாராகும் வகையில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் இந்திய அணிக்காக திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் இருவரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்பின் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பவல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் போட்டிக்கு முன்பாக இரு நாட்டு வீரர்களும் மைதானத்தில் அணி வகுக்க, தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது திடீரென எமோஷனலான ஹர்திக் பாண்டியா, இந்திய அணியின் 200வது டி20 போட்டிக்கு தலைமையேற்றதை நினைத்து ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
இரு கட்டத்தில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த ஹர்திக் பாண்டியா, கைகளை வைத்து துடைத்தார். இந்த காட்சிகள் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதுமே எமோஷனலான வீரராக அறியப்படும் ஹர்திக் பாண்டியா, எப்போதும் தந்தை மற்றும் கடந்த வந்த பயணத்தை நினைவு கூர்வார். அந்த வகையில் இன்றும் வானத்தை பார்த்து தந்தைக்கு நன்றி கூறினார்.
இதையடுத்து இந்திய வீரர்கள் ஃபீல்டிங் செய்ய களமிறங்கினார்கள். அப்போது இந்திய வீரர்களை தயார்ப்படுத்தும் வகையில் ஹர்திக் பாண்டியா பல்வேறு ஆலோசனைகளை கூறினார். அதேபோல் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ளதால், இந்த டி20 தொடர் முக்கியமானதாக கருதப்படுகிறது.