மும்பை: இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது பேட்டிங் ஃபார்ம் குறித்து கடும் விமர்சனங்களையும் அழுத்தத்தையும் சந்தித்து வருகிறார். மிடில் ஆர்டரில் இந்திய அணியின் தூணாகக் கருதப்படும் அவர், சமீபகாலமாக ரன்கள் குவிப்பதில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். இது அணியின் பேட்டிங் தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
வலதுகை பேட்ஸ்மேனான சூர்யகுமார், 20 டி20 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், அவர் 13.35 என்ற மிகக் குறைந்த சராசரியில் வெறும் 227 ரன்கள் மட்டுமே குவித்து சறுக்கலை சந்தித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட உள்நாட்டுத் தொடரிலும் அவரது மோசமான ஆட்டம் தொடர்கிறது. இதில் முதல் போட்டியில் 12 ரன்களும், அடுத்த போட்டியில் வெறும் 5 ரன்களும் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார்.

சூர்யகுமார் யாதவின் தொடர் சொதப்பல் குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, அவருக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், "நீங்கள் அணியின் கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு கேப்டனின் பணி என்பது டாஸ் போடுவது, பந்துவீச்சாளர்களை நிர்வகிப்பது அல்லது வியூகங்களை வகுப்பது மட்டுமல்ல. முதல் நான்கு இடங்களுக்குள் பேட் செய்கிறீர்கள் என்றால், ரன்கள் அடித்து அணியை வழிநடத்துவதுதான் உங்களின் முதன்மைப் பொறுப்பு."
"சூர்யகுமார் பல போட்டிகளாக இப்படித்தான் ஆடி வருகிறார். 17 இன்னிங்ஸ்களில் 14 என்ற சராசரியுடன், ஸ்ட்ரைக் ரேட்டும் திருப்திகரமாக இல்லை. ஒரு அரைசதம் கூட இல்லாமல், வெறும் இரண்டு முறை மட்டுமே 25 ரன்களைக் கடந்திருப்பது ஒரு கவலையான விஷயமாகும். இந்த மோசமான ஆட்டத்திறன் ஐபிஎல்லுக்கு முன்பும் பின்பும் தொடர்கிறது."
"சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, அல்லது அவர் உலகக் கோப்பையில் இந்தியக் கேப்டனாக இருக்க மாட்டார் என்று நான் கூறவில்லை. நான் அதைச் சொல்லவே இல்லை, எனவே என்னை ஒருபோதும் தவறாகக் குறிப்பிடாதீர்கள். ஆனால், அவர் நிச்சயம் ரன்கள் குவித்து, தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை."
"3-வது அல்லது 4-வது இடத்தில் பேட் செய்யும் ஒருவர், தொடர்ந்து நீண்ட காலத்திற்கு ரன்கள் எடுக்கவில்லை என்றால், உலகக் கோப்பையைத் தொடங்கும் போது அவரால் முழு நம்பிக்கையுடன் களமிறங்க முடியாது. எனவே, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் ரன்களைக் குவித்து, அணியின் வெற்றிக்கு வித்திடுவது மிகவும் இன்றியமையாதது ஆகும்," என ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.