
எளிதில் உணர்ச்சிவசப்படும் கோலி
இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தி பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரராக உள்ளவர் கேப்டன் கோலி. பல விஷயங்களில் நிதானமான போக்கை அவர் கடைபிடித்து வந்தாலும் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக உள்ளார். இதனால் அம்பயர் உள்ளிட்ட பலரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடும் போக்கு அவரிடம் காணப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இன்னல்களுக்கும் அவர் ஆளாகி வருகிறார்.
அம்பயர் முடிவால் கொந்தளித்த கோலி
இந்தியாவிற்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய முதல் ஒருநாள் சர்வதேச போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் 48வது ஓவரில் ஜடேஜாவின் அவுட் குறித்த அம்பயரின் முடிவை அடுத்து விராட் கோலி கொந்தளித்தார். இதற்கும் மேல், மூன்றாவது அம்பயரின் ஆலோசனைக்கு பிறகே அவுட் முடிவு அறிவிக்கப்பட்டது.

அடிக்கடி உணர்ச்சிவசப்படும் கோலி
தலைமை பொறுப்பில் உள்ள கோலி, எத்தனையோ சாதனைகளை எளிதாக செய்து வருவதுடன், தான் தலைமையேற்றுள்ள இந்திய அணியின் பல்வேறு சாதனைகளுக்கும் காரணமாக உள்ளார். ஆயினும் அவருடைய எளிதில் உணர்ச்சிவசப்படும் இத்தகைய பண்பால் அவர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதுடன் அணி வீரர்களுக்கும் நெருக்கடிகளை அளித்து வருகிறார்.

அம்பயருடன் வாக்குவாதம்
எளிதில் உணர்ச்சிவசப்படுவது கோலிக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த ஜூன் மாதத்தில் சவுதாம்டனில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரஹ்மத் ஷாவின் அவுட் குறித்து கோலி மற்றும் பௌலர் பும்ரா அம்பயரிடம் அப்பீல் செய்தனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால், அம்பயருடன் கோலி ஆக்ரோஷமாக வாதிட்டார். இதையடுத்து போட்டி முடிவில் அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளியும் போட்டி ஊதியத்தில் 25 சதவிகிதம் அபராதமும் ஐசிசி தரப்பில் விதிக்கப்பட்டது.

ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக புகார்
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஏற்கனவே ஒரு டீமெரிட் புள்ளியை கோலி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 புள்ளிகளை பெற்றும் கோபம்
2 ஆண்டுகளில் 4 டீமெரிட் புள்ளிகளை பெற்றால் சம்பந்தப்பட்ட வீரருக்கு 2 ஒருநாள் போட்டிகள், 2 டி20 போட்டிகள் அல்லது ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். இந்நிலையில் 2 டீமெரிட் புள்ளிகளை பெற்றுள்ள கோலி, கேப்டனாக இருந்தும் தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

தோனியும் சளைத்தவரல்ல
கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் தோனியும் ஐபிஎல் போட்டிகளில் அம்பயருடன் வாக்குவாதம் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டவர்தான். கடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நோ-பால் குறித்து அம்பயருடன் வாக்குவாதம் செய்ததால், தோனிக்கு 50 சதவிகித ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டது.

சாதனை பயணத்தில் தடைக்கற்கள்
ஐசிசி விதிகளின் அடிப்படையில் அம்பயர் உள்ளிட்டவர்களுடன் வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், அதை அனைத்து வீரர்களும் முறையாக கடைபிடிப்பதில்லை. அணியின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அணியை வழிநடத்துவதே முறையானதாக இருக்கும். எந்த நேரத்திலும் தங்களது நிதானத்தை அவர்கள் தவறவிடக் கூடாது. இந்நிலையில், கோலியின் இத்தகைய நடவடிக்கைகள், அவரது சாதனை பயணத்தில் தடைக்கற்களாக அமையும் என்பதில் ஐயமில்லை.

யோகா உள்ளிட்டவை உதவலாம்
பல நேரங்களில் சஸ்பெண்ட் ஆகும் நிலைக்குக்கூட வீரர்களின் கோபம் இட்டு செல்ல வாய்ப்புண்டு என்பதால் தலைமை பொறுப்பில் உள்ள விராட் கோலி, நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. நிதானத்தை தொடர்ந்து கோலி கடைபிடிக்க அவருக்கு யோகா போன்றவை உதவலாம். ஏற்கனவே பல்வேறு தொடர் பயிற்சிகள் மூலம் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டுள்ள விராட் கோலி, மனதையும் கையாள கற்றுக் கொண்டால், அவர் தலைமையில் இந்திய அணி மேலும் பல உயரங்களை தொடலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications











