மும்பை: இந்தியாவின் மிக முக்கியமான உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீப் டிராபி போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பாத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மீது ரசிகர்கள் கடும் கோபத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர்.
இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் ரஞ்சி டிராபிக்கு அடுத்தபடியாக மிகவும் கவுரவமிக்கதாகக் கருதப்படுவது துலீப் டிராபி. இந்தத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. காயத்திலிருந்து மீண்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், ரியான் பராக் போன்ற பல முன்னணி இந்திய வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடுவதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் போட்டிகளைக் காணக் காத்திருந்தனர்.

ஆனால், வடக்கு மண்டலம் - கிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் - வடகிழக்கு மண்டலம் அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு காலிறுதிப் போட்டிகளையும் எந்த ஒரு தொலைக்காட்சி அல்லது ஓடிடி தளத்திலும் நேரலையில் ஒளிபரப்ப பிசிசிஐ ஏற்பாடு செய்யவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, சமூக வலைதளமான 'X' (ட்விட்டர்) பக்கத்தில் ரசிகர்கள் பிசிசிஐயைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். "இப்போதெல்லாம் தெருவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளைக் கூட யூடியூபில் லைவ் செய்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய தொடரை பிசிசிஐ கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் மோசம்" என்றும், "இது துலீப் டிராபிக்கு இழைக்கப்படும் அவமானம்" என்றும் பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான் போன்ற வீரர்களுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில், பிசிசிஐயின் இந்த அலட்சியப் போக்கு அவர்களைச் சோர்வடையச் செய்துள்ளது.
உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருக்கும் பிசிசிஐ, தனது முக்கிய உள்ளூர் தொடர்களுக்கே உரிய முக்கியத்துவம் கொடுக்காதது கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசப் போட்டிகளுக்குக் கொடுக்கும் அதே கவனத்தை, உள்ளூர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் பிசிசிஐ கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.