மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் நியமனத்துக்கு நன்றி தெரிவித்து கவுதம் கம்பீர் வெளியிட்டு இருக்கும் முதல் பதிவிலேயே, "அதிகாரத்தை பயன்படுத்துவேன்" என்ற வார்த்தையை கூறி தெறிக்க விட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2024 டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட். கிரிக்கெட் ஜாம்பவான் ஆன அவர் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தினார். 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதி போட்டி மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி என மூன்று இறுதிப் போட்டிகளுக்கு இந்திய அணியை கொண்டு சென்றார். ஆனால், அதில் டி20 உலகக் கோப்பையில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ராகுல் டிராவிட் இந்திய அணியில் இருந்து விடைபெற்ற நிலையில், மற்றொரு முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடியான, ஆக்ரோஷமான குணம் கொண்ட கம்பீரை பயிற்சியாளராக நியமித்து இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த நிலையில் தனது நியமனம் குறித்து கவுதம் கம்பீர் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் இந்திய மக்களின் கனவை நிறைவேற்றுவதற்கு எனது அதிகாரத்தை பயன்படுத்தி என்ன செய்ய வேண்டுமோ, அவற்றை எல்லாம் செய்வேன் என கூறி இருக்கிறார். அதிகாரத்தை பயன்படுத்துவேன் என்று கூறி இருப்பதால், முதல் அடியே அதிரடியாக எடுத்து வைத்துள்ளார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கவுதம் கம்பீர் வெளியிட்ட பதிவு - "இந்தியா எனது அடையாளம் எனது நாட்டுக்காக சேவை செய்வது என்பதை எனது வாழ்நாளின் கவுரவமாக கருதுகிறேன். மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். முன்பு வீரராக இருந்த நான், இப்போது பயிற்சியாளராக செயல்படப் போகிறேன். ஆனால், எனது குறிக்கோள் ஒன்றே. ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்க வேண்டும் என்பதே அந்த குறிக்கோள். இந்திய அணி, 140 கோடி இந்தியர்களின் கனவுகளை சுமந்து கொண்டு இருக்கிறது. அவர்களின் கனவுகளை நனவாக்க எனது அதிகாரத்தை பயன்படுத்தி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்" இவ்வாறு கவுதம் கம்பீர் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையிலும் கவுதம் கம்பீர் தனது நியமனத்தை ஏற்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில், "மூவர்ணத்துக்காக சேவை செய்வதை எனது முக்கிய கவுரவமாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ராகுல் டிராவிட், அவரது குழுவினர் மற்றும் உதவியாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். அவர்கள் மிகச் சிறப்பாக அணியை வழி நடத்தினார்கள். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்பது எனக்கு பெருமையாகவும், ஆர்வமாகவும் உள்ளது. நான் இந்திய அணிக்காக ஆடிய போது இந்திய அணியின் உடையை அணிவதை பெருமையாக எண்ணி இருக்கிறேன். இந்த புதிய பதவியிலும் அதேபோலவே இருப்பேன்" என்று கூறி இருக்கிறார்.