
87வது வயதில் காலமானார்
கிரிக்கெட் சூப்பர் ஃபேனாக போற்றப்படும் சாருலதா படேல் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 87 வயதான சாருலதா கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
டிவிட்டர் பக்கத்தில் பதிவு
சாருலதா படேல் மறைவிற்கு பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. 87 வயதிலும் கிரிக்கெட்டை நேரில் பார்த்து வீரர்களை உற்சாகப்படுத்தியவர் அவர் என்று பாராட்டு தெரிவித்துள்ளது. அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

சாருலதாவை சந்தித்த கோலி
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின்போது சாருலதா படேலை நேரில் சந்தித்த விராட் கோலி, கிரிக்கெட்டின்மீது அவர் கொண்ட காதலால் ஈர்க்கப்பட்டு அவருக்கு சிறப்பு செய்தியை அனுப்பியிருந்தார். இத்தகைய ரசிகர்களே தங்களுடைய வளர்ச்சிக்கு காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.

அர்ப்பணிப்பு ரசிகை
இதையடுத்து தனது டிவிட்டரில் சாருலதாவின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த விராட் கோலி, இந்த வயதில் கிரிக்கெட்டில் இதுபோன்ற ஆர்வம் கொண்ட ரசிகையை தான் பார்த்ததில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

1983 உலக கோப்பை போட்டி
கடந்த பல வருடங்களாக தான் கிரிக்கெட் ரசிகையாக பல போட்டிகளை நேரில் பார்த்துள்ளதாகவும், 1983ல் கபில்தேவ் தலைமையில் இந்தியா உலக கோப்பையை கைப்பற்றியபோது தான் அந்தப் போட்டியை ரசித்ததாகவும் அவர் பேட்டி ஒன்றின்போது தெரிவித்திருந்தார்.
ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை
இந்நிலையில் சாருலதா படேலின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக இந்திய வீரர் ஷிகர் தவான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











