சிட்னி: இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காத இளம் வீரர் ஒருவர் தனக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படுமா? அது பற்றி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அல்லது கேப்டன் ரோஹித் சர்மா ஏதாவது சொன்னார்களா? என பத்திரிக்கையாளர் ஒருவரிடம் கேட்டு இருக்கிறார்.
இந்திய அணியில் என்ன நடக்கிறது? என மூன்றாவது நபரிடம் அந்த இளம் வீரர் கேள்வி கேட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய டெஸ்ட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா அணியின் கேப்டனாக இருந்தார்.

இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளுக்கு ரோஹித் சர்மா அணியின் கேப்டனாக இருந்தார். இரண்டாவது போட்டிக்கு முன்னதாக இந்த கிரிக்கெட் தொடரை பற்றி செய்தி சேகரித்து வரும் பத்திரிக்கையாளர் ஒருவரை இந்திய அணியின் இளம் வீரர் ஒரு பொது இடத்தில் யதேச்சையாக சந்தித்து இருக்கிறார்.
அப்போது, "இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அல்லது கேப்டன் ரோஹித் சர்மா என்னை பற்றி உங்களிடம் ஏதாவது சொன்னார்களா? எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா?" என கேட்டு இருக்கிறார். தன்னிடம் அணியில் யாரும் எதுவும் சொல்வதில்லை எனவும் அவர் வருத்தப்பட்டு இருக்கிறார்.
இதன் மூலம் இந்திய அணியில் இளம் வீரர்கள் ஒதுக்கப்படுகிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி மோசமான தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் வீரர்களை சரியாக ஒருங்கிணைக்கவில்லை என்ற தகவலும் இதன் மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.
இளம் வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு இல்லை? எப்போது வாய்ப்பு அளிக்கப்படும்? என தெளிவாக விளக்கப்படவில்லை எனில் அவர்கள் மிகவும் சோர்வடைவார்கள். அதன் பின் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் போது, அதை சரியாக பயன்படுத்த மாட்டார்கள்.
இந்த நிலையில், இந்திய அணி நிர்வாகம் இந்த விஷயத்தை சரியாக கையாளவில்லை என்பது தெரிய வந்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மாவே ஐந்தாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என்பது தான் இதன் உச்சம். பத்திரிக்கையாளரிடம் கேள்வி எழுப்பிய அந்த வீரர் சர்ஃபராஸ் கானாகவோ அல்லது பிரசித் கிருஷ்ணாவாகவோ இருக்கலாம் என ரசிகர்கள் தங்கள் ஊகத்தை வெளியிட்டு வருகின்றனர். .