ரசிகர்கள் செமையா கலாய்ச்சும், நிம்மதியா தூங்கும் ரவி சாஸ்திரி.. எப்படி தெரியுமா?
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீப காலமாக தன் கருத்துக்களால், செய்கைகளால், கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.
குறிப்பாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் சொன்ன கருத்துக்கள் சர்ச்சையை உண்டாக்கியது.
இது பற்றி கேட்ட போது, ரவி சாஸ்திரி இதையெல்லாம் நான் கண்டு கொள்வதே இல்லை என்பது போல பேசியிருக்கிறார்.

சிறந்த அணி பேச்சு
இங்கிலாந்தில் இந்தியா டெஸ்ட் தொடரை இழந்த போது, "தற்போதுள்ள இந்திய அணிதான் கடந்த 15 ஆண்டுகளில் சிறந்த அணி" என ஒரு சர்ச்சை கருத்தை கூறி செமையாக வாங்கி கட்டிக் கொண்டார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை ரவி சாஸ்திரியை வெளுத்து வாங்கினர்.

நடிகையோடு காதலா?
அடுத்து பாலிவுட் நடிகை நிம்ரத் கவுரோடு ரவி சாஸ்திரி காதலில் இருக்கிறார் என யாரோ கொளுத்திப் போட அந்த விவகாரம் பற்றிக் கொண்டு எரிந்தது. அதை இருவருமே மறுத்தனர். ஆனால், ரசிகர்கள் விடவில்லை. சமூக வலைதளத்தில் காய்ச்சி எடுத்துவிட்டார்கள்.

பரவிய வதந்தி
அடுத்து ஆசிய கோப்பை வெற்றிக்கு பிறகு டிவி கேமரா முன்பு தானாக வந்து பேட்டி கொடுத்தார் ரவி சாஸ்திரி. அப்போது அவரது முகம் கொஞ்சம் தெளிவில்லாமல் இருப்பது போல இருக்கவே, அவர் குடித்துவிட்டு வந்து பேட்டி கொடுக்கிறார் என வலைதளத்தில் பற்றிக் கொண்டது.

வலைதளங்களை பார்க்கவே மாட்டேன்
இதை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படவில்லையா? என பத்திரிக்கை பேட்டி ஒன்றில் கேட்டதற்கு, "நான் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன். ஆனால், என் பதிவிற்கு என்ன பதில் வருகிறது என்றெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். தகவல்கள் தெரிந்து கொள்ள நான் செய்தித்தாள்கள் மட்டுமே படிப்பேன். சமூக வலைதள விமர்சனங்களை படிக்காததால், நான் நிம்மதியாக தூங்குகிறேன்" என கூறி இருக்கிறார் ரவி சாஸ்திரி.


Click it and Unblock the Notifications