மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ளே விலகியதையடுத்து, புதிய பயிற்சியாளர் தேர்வு இன்று நடைபெற்றது.
இந்திய அணி கேப்டன் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே விலகினார். இதனையடுத்து, புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய சச்சின், கங்குலி, லட்சுமண் அடங்கிய இந்திய கிரிக்கெட் அறிவுரை குழு ஆலோசனை கூட்டம் இன்று மதியம் 2 மணியளவில் தொடங்கியது.

மும்பையிலுள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், கங்குலி, லட்சுமணன் பங்கேற்றனர். இங்கிலாந்திலுள்ள சச்சின் டெண்டுல்கர், ஸ்கைப் வாயிலாக காணொலி காட்சி மூலம் இவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பயிற்சியாளர் பதவிக்கு, ரவி சாஸ்திரி, சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், ஃபில் சிம்மன்ஸ், லால்சந்த் ராஜ்புத், தொட்ட கணேஷ் ஆகிய 7 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கிரிக்கெட் அறிவுரை குழுவினர் முன்னிலையில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது. இதில் சிம்மன்ஸ் மற்றும் தொட்ட கணேஷ் தவிர்த்த பிறர் இன்று நேர்காணலில் பங்கேற்றனர். சாஸ்திரி கடந்த வருடத்தை போலவே இவ்வருடமும் ஸ்கைப் வழியாக நேர்காணலில் பங்கேற்றார்.
இருப்பினும் இதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மே.இ.தீவுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு கேப்டன் கோஹ்லி நாடு திரும்ப உள்ளதால், அவர் வந்ததும், கலந்து பேசி முடிவெடுக்கலாம் என திட்டமிட்டுள்ளதாக கங்குலி நிருபர்களிடம் தெரிவித்தார். கோஹ்லி யாருடைய பெயரையும் பரிந்துரை செய்யவில்லை எனவும் அவர் கூறினார்.