பெங்களூரு: இந்திய டெஸ்ட அணியின் வருங்கால விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் துருவ் ஜுரேல் அடுத்து நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட்டை முந்தி பிளேயிங் லெவனில் தான் இடம்பெற வேண்டும் என எதிர்பார்த்தார். ஆனால், அவர் "ஒப்புக்கு சப்பாணி"யாக மட்டுமே அணியில் இடம் பெறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
ரிஷப் பண்ட் கடந்த 2023 ஆண்டில் விபத்தில் சிக்கி ஓய்வில் இருந்ததால் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. அவர் இல்லாத இடைவெளியில் இந்திய அணியில் நான்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றனர். அவர்களில் கடைசியாக வாய்ப்பு பெற்ற துருவ் ஜுரேல் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்.

மிகவும் இக்கட்டான நிலையிலும் அவர் பேட்டிங் செய்து ரன் குவித்து இந்திய அணியின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்தார். அதனால், அவர் இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக மாறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தற்போது ரிஷப் பண்ட் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் துவங்கி விட்டதால், இந்திய டெஸ்ட் அணிக்கும் திரும்ப உள்ளார் என கூறப்பட்டது.
ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளிலேயே மிகவும் சிறப்பாக ரன் சேர்க்கக் கூடியவர் என்பதால் நிச்சயம் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இடம் பெற அதிக வாய்ப்பு இருந்தது. அதே சமயம், துருவ் ஜுரேல், ரிஷப் பண்ட்டை முந்த வேண்டுமென திட்டமிட்டார்.
அதற்காக வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய வீரர்களை பரிசோதிக்கும் முயற்சியாக நடைபெற்று வரும் துலீப் ட்ராபி உள்ளூர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடி ரன் குவிக்க வேண்டும் என அவர் நினைத்தார். ஆனால், அவரது எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக இந்த தொடரில் ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம் ஆடினார். ஆனால், துருவ் ஜுரேல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்திருக்கிறார்.
இதை அடுத்து ரிஷப் பண்ட் அடுத்த ஐந்து மாதங்களில் இந்திய அணி ஆட உள்ள 10 டெஸ்ட் போட்டிகளிலும் இடம் பெறுவது உறுதியாகிவிட்டது. அவரே இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக செயல்படுவார் முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான போட்டியில் துருவ் ஜுரேல் "ஏ" அணியிலும், ரிஷப் பண்ட் "பி" அணியிலும் இடம் பெற்று இருந்தனர். இந்தியா பி அணியில் இடம் பெற்றிருந்த ரிஷப் பண்ட் முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து இருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி ஆட்டம் ஆடி 47 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
இந்தியா ஏ அணியில் இடம்பெற்று இருந்த துருவ் ஜுரேல் முதல் இன்னிங்ஸில் 2 ரன்களில் ஆட்டம் இழந்து இருந்தார். அவருக்கு இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரியவில்லை. இதனிடையே ரிஷப் பண்ட் ஆடிய அதிரடி ஆட்டம் அவருக்கான வாய்ப்பை உறுதி செய்து இருக்கிறது. எனவே, துருவ் ஜுரேல் இந்திய டெஸ்ட் அணியில் மாற்று விக்கெட் கீப்பராக மட்டுமே இடம்பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.