ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..! தவிக்கும் பிசிசிஐ
மும்பை:இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக திட்டமிட்டபடி இந்திய அணி புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
12வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த வாரம், விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
பிரதான போட்டிகளுக்கு முன்னதாக, மே 25-ம் தேதி பயிற்சி போட்டியில் இந்திய, நியூசிலாந்துடன் விளையாடுகிறது. அதற்காக மே 22ம் தேதி இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்ட திட்டமிடப்பட்டிருந்தது.

டிக்கெட் முன்பதிவு
பயணத்துக்கான விமான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர், விரைவில் இந்திய அணி இங்கிலாந்து புறப்படும் வகையில் பயண ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டிருந்தன.

விமான சேவை நிறுத்தம்
ஆனால், கடந்த வாரம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை முழுவதுமாக நிறுத்தியது. அந்த விமானத்திலேயே இந்திய அணி வீரர்கள் பயணம் செய்ய 30 பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தன.

புதிய சிக்கல்
இதனால், திட்டமிட்டபடி இந்திய அணி புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, மற்ற விமானங்களில் பயணம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருக்கை வசதி இல்லை
ஆனால், அனைத்து வீரர்களும் ஒரே விமானத்தில் பயணம் செய்யும் வகையில் டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. சில வீரர்கள் தங்களது இருக்கை வசதிகளை சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று கிரிக்கெட் நிர்வாகம் கூறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications