மும்பை :இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த அனுபவ கிரிக்கெட் பயிற்சியாளர் டபிள்யூ வி ராமன் அவருக்கு போட்டியாக களத்தில் குதித்துள்ளார். அவரையும் பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனை குழு நேர்முகத் தேர்வு செய்து இருக்கிறது. அவர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டபிள்யூ வி ராமன் இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் தமிழ்நாடு அணிக்காக பல ஆண்டுகள் பயிற்சியாளராக செயல்பட்டார். அவரை மேற்கு வங்க அணியின் பயிற்சியாளராக நியமிக்க சுமார் மூன்றாண்டு காலம் முயற்சிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் புகழ்பெற்ற பயிற்சியாளராக விளங்கினார்.

அதன் பின் 2014ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இடம்பெற்றார். அந்த ஆண்டு கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பை வென்றது. அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பின் 2015 முதல் 2018 வரை பிசிசிஐ-யின் கீழ் செயல்படும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்தார். அந்த கால கட்டத்தில் பல இளம் வீரர்களை அவர் தயார் செய்தார். அதன் பின் இந்திய மகளிர் அணிக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் ஒருவர் தேவை என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது, 2018 முதல் 2021 வரை அவர் மகளிர் அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டார். 2021 வரை அவர் மகளிர் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். பிசிசிஐ அவரை பதவியில் இருந்து நீக்கியது குறித்து அப்போது சில சர்ச்சைகள் எழுந்தன. எனினும், செயலாளர் ஜெய் ஷாவுக்கு நன்றி கூறி அந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தார் ராமன்.
இந்த நிலையில் தற்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராமனும் விண்ணப்பித்து இருக்கிறார். கவுதம் கம்பீர் தான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என உறுதியாக கூறப்பட்ட நிலையில், பிசிசிஐ ஆலோசனை குழுவின் உறுப்பினர்களிடம் தனது திட்டத்தை முன் வைத்து இருக்கிறார் ராமன். அது அவர்களை ஈர்த்ததாக சொல்லப்படுகிறது.
மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரிடம் இருந்து இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய நிலையில் உள்ளது. அது குறித்து ராமன் விரிவான திட்டங்களை வைத்திருந்ததாகவும், அடுத்த நான்காண்டுகளில் என்னென்ன செய்ய வேண்டும் என அவர் கூறிய திட்டங்கள் பிசிசிஐ அதிகாரிகளை ஈர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.
நாளை அல்லது அதற்கு மறுநாள் இந்த நேர்முகத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. நிச்சயமாக கவுதம் கம்பீருக்கு, ராமன் கடுமையான போட்டியாக இருக்கிறார் என பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. கவுதம் கம்பீருக்கு அரசியல் செல்வாக்கு மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உடனான நெருக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், ஏற்கனவே கவுதம் கம்பீரும், ராமனும் ஐபிஎல் அணியில் ஒன்றாக செயல்பட்டு இருப்பதால் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராகவும், ராமன் பேட்டிங் பயிற்சியாளராகவும் வரவும் வாய்ப்பு உள்ளது.