மும்பை: தான் கடுமையாக நடந்து கொண்டதால் தான் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்திய அணி அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
அதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் பலரும் பங்கேற்கும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் டிராபி தொடர் நடைபெற உள்ளது. அதில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் தவிர மற்ற வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அனைத்து வீரர்களும் அந்த தொடரில் பங்கேற்கக் காரணம், தான் எடுத்த கடுமையான நடவடிக்கைகள் தான்; அதனால் தான் அவர்கள் இந்த தொடரில் விளையாடுகிறார்கள் என ஜெய் ஷா கூறி இருக்கிறார்.

முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் உள்ளூர் போட்டிகளில் விளையாட மறுத்தனர். அதன் காரணமாக அவர்களது பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். ஆனால், இஷான் கிஷன் அப்போதும் கூட உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை.
இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் போட்டிகளில் விளையாடியதால் சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வாய்ப்பு பெற்றார். ஆனால், இஷான் கிஷனுக்கு இதுவரை இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடினால் மட்டுமே இந்திய அணியில் அவரை தேர்வு செய்வோம் என தேர்வு குழுவினர் உறுதியாக உள்ளனர்.
தற்போது ஜார்கண்ட் மாநில அணிக்காக புச்சி பாபு உள்ளூர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார் இஷான் கிஷன். அடுத்து துலீப் டிராபி தொடரிலும் அவர் விளையாட உள்ளார். இது குறித்து பேசிய ஜெய் ஷா, "துலீப் ட்ராபி தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை தவிர அனைவரும் விளையாட உள்ளனர். அதற்கு காரணம் நான் எடுத்த கடுமையான முடிவுகள் தான். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் துலீப் ட்ராபியில் விளையாட உள்ளனர்." என்றார்.
மேலும், "நாங்கள் சற்று கடுமையாக நடந்து கொள்கிறோம். ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டபோது நான் தான் அவரை உள்ளூர் போட்டியில் விளையாடுமாறு கூறினேன். அது இப்போது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. உங்களுக்கு காயம் ஏற்பட்டால் நீங்கள் உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும். அப்போதுதான் இந்திய அணியில் இடம் கிடைக்கும்." என்றார் ஜெய் ஷா.