மும்பை: கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத காரணத்தால் இனி இந்தியாவில் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்தப் போவதில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறி இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்திய மண்ணில் இதுவரை மூன்று பகல் - இரவு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடந்து இருக்கிறது.
2019 ஆம் ஆண்டு இந்திய அணி தனது முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடியது. அந்தப் போட்டி மூன்று நாட்களில் முடிவுக்கு வந்தது. அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்தது. அதேபோல, இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது பகல் - இரவு டெஸ்ட் போட்டியும் மூன்று நாட்களில் முடிவுக்கு வந்தது.

இப்படி பகல் - இரவு டெஸ்ட் போட்டிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவுக்கு வருவதால் டிக்கெட் வாங்கி போட்டியை நேரில் காண வரும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள் என்பதால் இனி இந்தியாவில் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெறாது எனவும் அவர் கூறி இருக்கிறார்.
இது பற்றி ஜெய் ஷா ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், "பகல் - இரவு டெஸ்ட் போட்டிக்கு ஐந்து நாட்களுக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கி போட்டியை காண வருகிறார்கள். ஆனால், போட்டி இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவுக்கு வந்து விடுகிறது. எங்களால் டிக்கெட் பணத்தை திரும்பியும் கொடுக்க முடியாது. இது எனக்கு ஏமாற்றமாக உள்ளது. அதனால், இனி இந்தியாவில் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்தப் போவதில்லை" என்றார் ஜெய் ஷா.
இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ளது. மற்ற நாடுகளில் நடத்தப்படும் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இனி இந்திய அணி பங்கேற்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.