மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்து இருந்தாலும், சில கிரிக்கெட் வீரர்களுக்கு இது பிரச்சனையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
ஏனென்றால் கம்பீர் வெறும் சாதாரண பயிற்சியாளராக மட்டும் வராமல், தமக்கு ஸ்பெஷல் பவர் வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்கிறார். அந்த வகையில் அணி தேர்வில் கம்பீரின் தலையீடு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கம்பீர் வந்தவுடன் சீனியர்களுக்கு தான் ஆப்பு இருக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் வைத்த வெடியே ஜூனியர் வீரர்களுக்கு தான். அதாவது இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பதால் ஒரே வீரர்கள் மூன்று பிரிவிலான கிரிக்கெட்டிலும் விளையாட கூடாது என்பதுதான் கம்பீர் போட்ட முதல் உத்தரவு.
அந்த வகையில் இதை புரிந்து கொண்டு தான் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட் இல் இருந்து தாங்களே விடை பெற்றுவிட்டனர். இந்த சூழலில் கம்பீர் தற்போது வைத்திருக்கும் முதல் ஆப்பு சுப்மன் கில்லுக்கும், ரிஷப் பண்டுக்கும் தான்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் தன்னுடைய திறமையை ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். ஆனால் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பண்ட் பெரிய அளவிலான சாதனையை இன்னும் புரியவில்லை. இதனால் கம்பீர், ரிஷப் பண்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று பேசி இருக்கிறார்.இது பண்ட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
ஆனால் இதற்கு கம்பீர் கொடுக்கும் விளக்கம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு என பல விக்கெட் கீப்பர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். குறிப்பாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் ஒரே வீரருக்கு மூன்று பிரிவிலும் வாய்ப்பு கொடுத்தால் மற்ற இருவர் என்ன செய்வார்கள் என்பது தான் கம்பீரின் கேள்வி.
இதேபோன்று கில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று பிரிவிலும் விளையாடுகின்றார். இந்த சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது வீரராக களமிறங்கும் நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக விளையாட அவருக்கு அதிக வாய்ப்பு இருக்கும். இதன் காரணமாக டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு ஃபார்முலாவை கம்பீர் தயார் செய்து இருக்கிறார்.