மும்பை : ஹர்திக் பாண்டியா காயத்தில் சிக்கி இருக்கும் நிலையில் அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது குறித்த தகவல் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளியாகி உள்ளது.
ஹர்திக் பாண்டியா வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்த போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இதை அடுத்து அவர் அந்தப் போட்டியில் பாதியிலேயே விலகினார். அடுத்து நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாண்டியா இடம் பெறவில்லை.
அவர் சிகிச்சை பெற வேண்டி பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கே அவருக்கு லண்டன் சிறப்பு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சைகள் நடந்தன.
இந்த நிலையில், இந்தியா, அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆட உள்ள போட்டிக்கு முன் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்து தயாராகி விடுவார் என கூறப்பட்டது. தற்சமயம், பாண்டியா என்ன நிலையில் இருக்கிறார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா தற்போது கணுக்காலில் ஏற்பட்ட வலியில் இருந்து குணமடைந்து விட்டார். அவருக்கு உண்மையில் சுளுக்கு மட்டுமே ஏற்பட்டு இருந்தது. அத்துடன் லேசான சிராய்ப்பு இருந்தது. இன்னும் ஒரீரு தினங்களில் அது குணமடைந்து விடும் என்றார் அந்த அதிகாரி. ஆனால், இன்னொரு சிக்கலும் உள்ளது.
வேகப் பந்துவீச்சாளர்களுக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டால் அது குணமடைந்தாலும், மீண்டும் அந்த இடத்தில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், பழைய வேகத்தில் பாண்டியா பந்து வீசுவதை இந்திய அணியின் பயிற்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். காயம் குணமடைந்தாலும் அவர் பந்து வீச்சு மாற வாய்ப்பு உள்ளது.
ஹர்திக் பாண்டியா பழைய நிலையில் பந்து வீசுகிறாரா? அவர் மீண்டும் பந்து வீசினால் காயம் அதிகமாகுமா? ஆகியவற்றை பொறுத்தே அவரால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்க முடியும். எனவே, இந்திய அணி அவரை ஆட வைக்க அவசரப்பட முடியாது. காத்திருந்து தான் ஆக வேண்டும். ஏற்கனவே, ஹர்திக் பாண்டியா தொடையில் வலியுடன் தான் முதல் இரண்டு போட்டிகளில் ஆடினார். அதைத் தொடர்ந்தே அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனால், பாண்டியா இல்லாமல் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ளும் என் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் இந்திய அணி சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை கொண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு பந்துவீச்சாளர் சரியாக பந்து வீசவில்லை என்றால் அது சிக்கலில் போய் முடியும். நியூசிலாந்து போட்டியிலும் குல்தீப் யாதவ் ஓவர்களில் அதிக ரன்கள் போனது. ஆனாலும், வேறு வழியின்றி அவர் 10 ஓவர்களை வீசினார். அதே நிலை இங்கிலாந்து போட்டியிலும் ஏற்படும். கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இது பெரும் சிக்கல் தான்.