பிர்மிங்காம்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேற்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி மனம் விட்டுப் பாராட்டியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், நேற்று பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி சிறப்பாக ஆடி, பாகிஸ்தானை வீழ்த்தியது. பெரும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் இந்திய அணி வீரர்கள் நேர்த்தியாக ஆடினர்.

இதனால், 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வென்றது. இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''இந்தியா, பாகிஸ்தான் இடையிலான நேற்றைய கிரிக்கெட் போட்டி, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. பாகிஸ்தான் வீரர்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே திரில்லிங் குறைய காரணமாகும்,'' என்றார்.
மேலும், ''ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. இந்த போட்டியை, வெல்வது உறுதி என்ற முடிவுடன், இந்திய வீரர்கள் திறம்பட விளையாடினர். இதுவே, ஆட்டம் அவர்களுக்குச் சாதகமாக அமைய காரணமாக இருந்தது.
ஆனால், பாகிஸ்தான் வீரர்கள், தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்திலேயே விளையாடியதால், தோல்வியடைந்துவிட்டனர். அவர்களின் தோல்வி வருத்தம் அளிக்கிறது. மொத்தத்தில், இந்திய அணியின் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாக இது அமைந்தது,'' என்று அப்ரிடி குறிப்பிட்டுள்ளார்.