சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் அணியில் ஒரு மூத்த வீரர் கேப்டன் பதவியை கேட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. அது குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கடுமையான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார். கேப்டன் பதவி கேட்ட அந்த மூத்த வீரர் யார் என வெளியே சொல்லி, அவரை அவமானப்பட வைக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டிக்கு முன்னதாக அணியில் இருந்து விலகினார். அவர் விலகியதை அடுத்து தற்காலிக கேப்டனாக துணை கேப்டன் பும்ரா செயல்பட்டு வருகிறார். ஆனால், ஐந்தாவது போட்டிக்கு முன் இந்திய அணி நிர்வாகத்தில் இது பற்றி விவாதங்கள் நடந்து வந்தபோது மூத்த வீரர் ஒருவர் தான் தற்காலிக கேப்டனாக செயல்பட விரும்புவதாக கூறி இருக்கிறார்.

அது பற்றி முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சரமாரியான விமர்சனத்தை தொடுத்து இருக்கிறார். அந்த மூத்த வீரர் விராட் கோலி தான் என ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில், ராபின் உத்தப்பா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். தன் சுயநலத்துக்காக அந்த மூத்த வீரர் கேப்டன் பதவியை பெற முயன்றதற்கு அவமானப்பட வேண்டும் எனக் கூறி இருக்கிறார்.
இது பற்றி ராபின் உத்தப்பா வெளியிட்டு இருக்கும் வீடியோவில் பேசியதாவது, "இந்திய அணியில் பிரச்சனைகளை சரி செய்வேன் என சொன்ன அந்த வீரர் யாராக இருந்தாலும் இந்த நேரத்தில் அவர் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்த மனிதராகத்தான் நான் நினைக்கிறேன். அவர் யாராக இருந்தாலும் இதற்காக அவமானப்பட வேண்டும். அணியில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற சூழ்நிலையில் தனிப்பட்ட சுயநலத்தை முன்வைத்து இருப்பது மிகக் கேவலமானது." எனக் கூறி இருக்கிறார்.
மேலும், "அணியை விட நீங்கள் உங்களை முன்னிறுத்த முடியாது. அணி எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அதை நாம் செய்யக்கூடாது. இந்த இக்கட்டான நேரத்தில் நீங்கள் உங்கள் அணியை இரண்டு மடங்கு மோசமான நிலைக்கு தள்ளி இருக்கிறீர்கள். அந்த நபர் யாராக இருந்தாலும் சரி, அவர் மூத்த வீரரோ அல்லது இளம் வீரரோ அது முக்கியமல்ல. அவரது பெயர் வெளியே சொல்லப்பட வேண்டும். அவர் அந்த அவமானத்தை சந்திக்க வேண்டும்." என்றர்,
"இது இத்தோடு நிறுத்தப்பட வேண்டும். இந்த சின்னப்பிள்ளைத்தனமான, சுயநலமான விஷயங்கள் இத்துடன் நிறுத்தப்பட்டு, அணியின் ஒற்றுமை மீட்கப்பட வேண்டும்." என்று கூறி இருக்கிறார் ராபின் உத்தப்பா. அந்த மூத்த வீரர் விராட் கோலி தான் என்ற சந்தேகம் இருக்கும் நிலையில், ராபின் உத்தப்பா அதிரடியான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். விராட் கோலி கேப்டன் பதவியை கேட்டது உண்மையா? என்பதும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இதுவரை அதுபற்றி உறுதிப்படுத்தப்படாத செய்திகள் மட்டுமே வெளி வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.