சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறும் திறமை உள்ள பல வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளிலேயே விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதில் ஒரு திறமையான வீரர்தான் ருதுராஜ் கெய்க்வாட்.
டாப் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டவர். ஆனால், அவருக்கு இதுவரை இந்திய அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்கவில்லை. இந்திய டி20 அணியிலும், ஒரு நாள் அணியிலும் அவ்வப்போது இடம் பெற்று வந்தார். 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு வரை அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், உலகக்கோப்பைக்கான அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை.

அதன் பின் அவர் இந்திய அணியில் ஒதுக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில், டெஸ்ட் அணியிலாவது அவருக்கு இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. டெஸ்ட் அணியில் மூன்றாம் வரிசையில் களம் இறங்கி வந்த சுப்மன் கில் சரியாக ரன் குவிக்கவில்லை என்ற விமர்சனம் இருந்தது. ஆனால், வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்தார்.
இதை அடுத்து அவரை இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, முதல் மூன்று வரிசைகளில் பேட்டிங் செய்யக் கூடிய ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் கிடைக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இனி துவக்க வீரர் ரோஹித் சர்மா அல்லது மூன்றாம் வரிசை வீரர் விராட் கோலி ஓய்வு பெற்றால் மட்டுமே ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்திய அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்காத போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட். ஐபிஎல் தொடரிலும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக ஆடி வருகிறார். அது மட்டுமே அவரது கிரிக்கெட் வாழ்வில் சிறந்த விஷயமாக அமைந்துள்ளது. அவர் சிஎஸ்கே வீரர் என்பதாலேயே இந்திய அணியில் ஒதுக்கப்படுகிறார் என்ற விமர்சனமும் உள்ளது.