மும்பை: தமிழக வீரர் சாய் சுதர்ஷனால் இரண்டு இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய டெஸ்ட் அணி அணியில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்பராஸ் கான் தற்போது புச்சி பாபு டெஸ்ட் தொடரில் பங்கேற்று மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்கள்.
இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் டிஎன்சிஏ 11 அணிக்கு எதிராக மும்பை அணி மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் 2 மற்றும் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். சர்பராஸ் கான் மொத்தமே இரண்டு இன்னிங்க்ஸ்களில் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒருமுறை டக் அவுட் ஆகி இருந்தார்.

மறுபுறம் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் இருக்கும் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இங்கிலாந்து கவுன்டி டெஸ்ட் தொடரில் சர்ரே அணிக்காக ஆடி வருகிறார். அவர் தனது இரண்டாவது போட்டியில் சதம் அடித்து ஃபார்மை நிரூபித்து இருக்கிறார். இதை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோருக்கு போட்டியாக வந்திருக்கிறார் சாய் சுதர்சன். சமூக ஊடகங்களில் சாய் சுதர்ஷனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
புச்சி பாபு உள்ளூர் டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் மற்றும் சர்பராஸ் கான் விளையாடி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்தத் தொடர் எளிதாக இருக்கும் என்று நினைத்து, அதில் ரன் குவித்தால் இந்திய அணியில் வாய்ப்பைப் பெறலாம் என அவர்கள் திட்டமிட்டே பங்கேற்றனர். ஆனால், அதற்கு நேர் மாறான விஷயங்கள் தற்போது நடந்துள்ளது. அந்தத் தொடரில் அவர்கள் ரன் குவிக்காததால் அவர்களின் செயல்பாடு குறித்த சந்தேகம் அதிகரித்து உள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் போன்ற முக்கிய வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். அந்த வகையில் மாற்று வீரர்களுக்கான இடம் மட்டுமே தற்போது காலியாக உள்ளது. அந்த இடத்தை பிடிக்கவே ஸ்ரேயாஸ், சர்பராஸ் கான் ஆகியோருக்கு இடையே போட்டி இருந்தது. தற்போது அவர்களுக்கு மேலும் அழுத்தத்தை அளிக்கும் வகையில் சாய் சுதர்ஷனும் அந்தப் போட்டியில் இணைந்து இருக்கிறார்.
இங்கிலாந்து கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்ஷன் 178 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். 10 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார். இந்திய அணி அடுத்து வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதற்கு முன் இந்திய டெஸ்ட் அணிக்கான வீரர்களை தேர்வு செய்ய உதவும் வகையில் துலீப் டிராபி தொடரை நடத்த உள்ளது பசி. இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ள வீரர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
இந்தப் போட்டிகளில் சிறப்பாக ஆடினால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கக்கூடும். அந்த வகையில் ஸ்ரேயாஸ், சர்பராஸ் கான் மற்றும் சாய் சுதர்ஷன் இந்த தொடரில் அதிக ரன் குவிக்க திட்டமிட்டு உள்ளனர். சாய் சுதர்சன் கவுன்டி போட்டியில் சதம் அடித்திருக்கும் நிலையில் துலீப் டிராபியில் மேலும் ஒரு சதம் அடித்தால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு பிரகாசமாகிவிடும். அந்த சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் மற்றும் சர்பராஸ் கான் இந்திய அணியில் இடம் பெறாமலும் போகலாம்.