டாப் லெவல் 'பயோ-பபுள்'.. தனி விமானங்கள்.. அசர வைக்கும் பிசிசிஐ ஆக்ஷன்
மும்பை: இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கை இன்று முதல் மும்பையில் தொடங்குகிறது. இந்திய அணி வீரர்கள் இதில் இணைகின்றனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இதற்காக, அடுத்த மாதம் 2ம் தேதி இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. முதன் முதலாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இறுதிப் போட்டி வரை இந்திய அணி முன்னேறி இருப்பதால், ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

தனி விமானங்கள்
இந்த நிலையில், இத்தொடருக்கான 14 நாட்கள் பயோ - பபுள் இன்று (மே.19) மும்பையில் தொடங்குகிறது. மும்பைக்கு வெளியே வசிக்கும் வீரர்களை அழைக்க, பிசிசிஐ சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. சென்னை, ஹைதராபாத், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் விமானங்கள், வீரர்களை அங்கிருந்து மும்பை அழைத்து வருகின்றன. மும்பையில் வசிக்கும் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரஹானே, கோச் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் அடுத்த வாரம், பயோ - பபுளில் இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெகட்டிவ் ரிசல்ட்
அதேசமயம், மும்பை பயோ - பபுளில் இணைவதற்கு முன்பு, வீரர்கள் அனைவரும் மூன்று முறை கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மூன்றிலும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வர வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, அவர்கள் மும்பைக்கே அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில், அவர்கள் எப்பேர்ப்பட்ட வீரராக இருந்தாலும், இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய மகளிர் அணியினரும் இன்று முதல் பயோ - பபுளில் இணைகின்றனர்.

அங்கும் 10 நாட்கள்
இங்கிலாந்து செல்லும் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியாக பிசிசிஐ கொரோனா பரிசோதனை மேற்கொள்கிறது. மும்பையில், 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் வீரர்கள், ஜூன் 2 அன்று இங்கிலாந்து புறப்படுவார்கள் என்று தெரிகிறது. அங்கு சென்ற பின் சவுத்தாம்ப்டனில் மேலும் 10 நாட்களில் பயோ- பபுள் விதிமுறைகள் தொடரும். எனினும், மும்பையில் இருந்ததை விட மிகக் கடுமையான பயோ - பபுள் அங்கு பின்பற்றப்படும் என்று தெரிகிறது.

பிசிசிஐ கோரிக்கை
அதாவது, பயிற்சி முடிந்த பிறகு ஹோட்டலுக்கு வரும் வீரர்கள், அதன்பின் எக்காரணம் கொண்டும் அறையை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். இரண்டு - மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். இதனால், சாஃப்ட் குவாரண்டைன் முறையை பின்பற்றும்படி இங்கிலாந்து வாரியத்துக்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications