கட்டாக்: யாரும் எதிர்பாராத வகையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியை மீண்டும் நியமிக்க பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
அந்த தொடரின் முடிவில் இந்திய அணியில் மிகப்பெரிய அளவில் மாற்றம் நடைபெற உள்ளது. ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி நீக்கப்பட்டு மூன்று விதமான அணிகளுக்கும் புதிய கேப்டன்களை நியமிப்பது குறித்து பிசிசிஐ விவாதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று வெளியான தகவலின்படி ஹர்திக் பாண்டியாவை ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியின் கேப்டனாக நியமிப்பது பற்றி பேச்சு நடந்து இருக்கிறது. ஆனால், தற்போது மேலும் அதிக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சூர்யகுமார் யாதவின் பேட்டிங் நன்றாக இருக்கும் பட்சத்தில் அவரே டி20 அணியின் கேப்டனாக இருப்பார்.
ஒருநாள் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார். டெஸ்ட் அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலியை நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விராட் கோலி கேப்டன் ஆக இருந்தவரை இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி உலக அளவில் நம்பர் 1 டெஸ்ட் அணியாக வலம் வந்தது. அதனால் அவரை மீண்டும் கேப்டனாக நியமிப்பது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் மட்டத்தில் விவாதம் நடந்து வருகிறது. கோலியின் பேட்டிங்
ஃபார்ம் மோசமாக இருப்பது மட்டுமே அவருக்கு எதிரான ஒரு விஷயமாக உள்ளது.
பும்ராவை டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்கவும் ஒரு திட்டம் உள்ளது. ஆனால், வேகப்பந்துவீச்சாளரான அவருக்கு நீண்ட தொடர்களுக்கு இடையே ஓய்வு அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் அவருக்கு கேப்டன்சி அளிப்பது சரியாக இருக்குமா? அவருக்கு கேப்டன்சி அழுத்தத்தை அதிகரிக்குமா? என்ற சந்தேகமும் உள்ளது.
ஜெய்ஸ்வால் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரை கேப்டனாக நியமிப்பதில் சில நடைமுறை சிக்கல்களும் உள்ளன. அவர்கள் இருவரும் கேப்டன்சியை ஏற்கும் அளவுக்கு இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்ற கருத்து உள்ளது. முன்பு இந்திய கிரிக்கெட்டில் மூன்று வித அணிகளுக்கும் ஒரே கேப்டன் தான் இருக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தது பிசிசிஐ.
ஆனால், இனி மூன்று வித அணிகளுக்கு மூன்று வித கேப்டன்களை நியமிப்பது குறித்து திட்டமிட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முழு அளவில் ஆதரவு தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.