மும்பை: வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் 'கில்லி'யாக இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் கௌதம் கம்பீரின் செயல்பாடு பிசிசிஐ-க்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் டெஸ்ட் அணிக்கு மட்டும் தனி பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ போட்ட ரகசியத் திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றதிலிருந்து கலவையான விமர்சனங்களே எழுந்து வருகின்றன. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பைகளை வென்று கம்பீர் கெத்து காட்டினாலும், டெஸ்ட் கிரிக்கெட் என்று வரும்போது இந்திய அணி தடுமாறி வருகிறது. குறிப்பாக, தென்னாப்பிரிக்கா மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா சந்தித்த படுதோல்வி, பிசிசிஐ-யை யோசிக்க வைத்துள்ளது.

SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) கம்பீர் தலைமையில் இந்தியா இதுவரை 10 தோல்விகளைச் சந்தித்துள்ளது. மேலும், இந்திய மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளிடம் ஒரு போட்டியில் கூட ஜெயிக்கவில்லை. இதனால் கவலையடைந்த பிசிசிஐ-யின் முக்கியப் புள்ளிகள் சிலர், சமீபத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தலைவராக இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மணை ரகசியமாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
"டெஸ்ட் அணி தடுமாறுகிறது... நீங்கள் டெஸ்ட் அணிக்கு மட்டும் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க முடியுமா?" என அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், லக்ஷ்மண் இந்த வாய்ப்பை நாசூக்காக மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பெங்களூருவில் உள்ள 'சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' (Centre of Excellence) தலைவராகப் பணியாற்றுவதிலேயே லக்ஷ்மண் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், சீனியர் அணியின் பயிற்சியாளராகப் பயணம் செய்வதில் அவருக்கு விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது.
லக்ஷ்மண் 'நோ' சொன்னதால், வேறு வழியின்றி கம்பீரே இப்போதைக்கு டெஸ்ட் பயிற்சியாளராகவும் தொடர்கிறார். மாற்று பயிற்சியாளர் கையில் இல்லாததால் கம்பீர் தனது டெஸ்ட் பயிற்சியாளர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஆனால், அவரது தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இன்னும் 5 வாரங்களில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பையை (2026) நோக்கிய பயணம்தான் கம்பீரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா கோப்பையை வென்றாலோ அல்லது இறுதிப்போட்டிக்குச் சென்றாலோ கம்பீரின் பதவி தப்பும். அப்படி இல்லையெனில், 2027 உலகக்கோப்பை வரை ஒப்பந்தம் இருந்தாலும், டெஸ்ட் அணிக்கு வேறு பயிற்சியாளரைத் தேட பிசிசிஐ தயங்காது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ராகுல் டிராவிட் இருந்தவரை அணியில் இருந்த வீரர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு இருந்தது. ஆனால், கம்பீர் வந்த பிறகு அந்த உணர்வு போய்விட்டது என வீரர்கள் புலம்புவதாகக் கிசுகிசுக்கப்படுகிறது. சமீபத்தில் சுப்மன் கில் டி20 அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டது, மற்ற வீரர்களிடை ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
"டி20 அணியின் துணை கேப்டனாக இருந்த ஒருவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனுக்கே இந்த நிலைமை என்றால், அடுத்தது நமக்கும் இடம் கிடைக்காமல் போகுமோ?" என்ற பயத்தில் இந்திய வீரர்கள் உள்ளதாகத் தெரிகிறது. டி20 உலகக்கோப்பை மற்றும் அதைத் தொடர்ந்து வரும் ஐபிஎல் இடைவெளிக்குப் பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர் விவகாரத்தில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.